பாஜக தலைவர்களுடன் விஜய் மல்லையா ரகசிய சந்திப்பு- ராகுல் குற்றச்சாட்டு
லண்டன்: நாடு கடத்தப்படவுள்ள விஜய் மல்லையா பாஜக தலைவர்களுடன் ரகசியமான முறையில் சந்தித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடனை பெற்றார் விஜய் மல்லையா. அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தப்பி ஓடினார். இதையடுத்து லண்டன் போலீஸ் உதவியுடன் அவரை பிடிக்க இந்திய அரசு முயற்சித்தது.
நீதிமன்றத்தில்
இந்நிலையில் அவரை கைது செய்து மும்பை சிறையில் வைக்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. எனினும் இந்திய சிறைச் சாலைகள் சுத்தமாக இருக்காது என்று விஜய் மல்லையா தரப்பு வாதம் செய்தது. இதனால் விஜய் மல்லையாவை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ள சிறையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை இந்திய அரசு வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
சிறப்பு சலுகைகள்
இந்நிலையில் இதுகுறித்து 4 நாட்கள் பயணமாக லண்டன் மற்றும் ஜெர்மனி சென்றுள்ள ராகுல் காந்தி கூறுகையில் இந்திய சிறைச்சாலைகள் சற்று கடுமையான இடங்கள்தான். ஆனால் நாட்டை விட்டே ஓடிபோன விஜய் மல்லையா போன்றோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கக் கூடாது.
சிறைச்சாலை
மல்லையா கவலைப்படும் அளவுக்கு இந்திய சிறையில் ஒன்றும் மோசமாக இருக்காது. நன்றாகவே இருக்கும். இந்தியர்களுக்கு ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். ரூ.9000 கோடியை வங்கிகளில் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய ஒருவர் சொகுசான சிறைச்சாலையை வேண்டுவதை ஏற்கமுடியாது.
பாஜக தலைவர்களுடன் சந்திப்பு
மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துள்ளார் என்ற ராகுல் அவர் யார் யாரை சந்தித்தார் என்பதை கூற மறுத்துவிட்டார்.