"ஒரு விந்தணு.. 67 குழந்தைகள்!" இப்படியொரு விஷயத்தை யாரும் எதிர்பார்க்கல.. கண்ணீரில் பல குடும்பங்கள்
பாரீஸ்: ஐரோப்பாவில் ஒரே ஒரு நபரின் விந்தணுவால் 67 குழந்தைகளுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவம் எப்படி நடந்தது.. இதன் பின்னணி என்ன.. இதை வரும் காலங்களில் தடுக்க முடியுமா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
இந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தையைப் பெறப் பலரும் மருத்துவச் சிகிச்சைகளையும் நாட வேண்டி இருக்கிறது. அப்படி சிகிச்சை மூலம் குழந்தை பெறுவோருக்கு விந்தணுவை தானம் கொடுக்கும் முறை இருக்கிறது.

வெளிநாடுகளில் இது பரவலாகவே பின்பற்றப்படும். அதாவது ஆண் ஒருவர் தனது விந்தணுவைத் தானமாகக் கொடுப்பார். அந்த விந்தணுவை வைத்து பெண்கள் கருத்தரிக்கப்படுவார்கள். ஆண்களுடன் இணைந்து இருக்க விரும்பாமல் குழந்தைகளைப் பெற்ற கொள்ள விரும்பும் பெண்களும் கூட வெளிநாடுகளில் இந்த முறையைத் தான் பின்பற்றுவார்கள்.
விந்தணு தானம்
அப்படி தான் ஐரோப்பாவில் இளைஞர் ஒருவர் தனது விந்தணுவைத் தானமாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன் மூலம் எட்டு நாடுகளில் சுமார் 67 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த குழந்தைகள் அனைத்தும் 2008-2015 வரையிலான காலகட்டத்தில் பிறந்துள்ளன. இதற்கிடையே விந்தணுவை தானம் செய்த அந்த நபருக்கு கேன்சரை உண்டாக்கும் மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவரது விந்தணு மூலம் பிறந்த குழந்தைகளிலும் 10 பேருக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிகப் பெரிய பிரச்சினை
இது மட்டுமின்றி அவர்களில் 23 பேர் TP53 கேரியர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். TP53 மரபணு மாறும்போது அது லிம்போமா, லுகேமியா உள்ளிட்ட பல வகை கேன்சரை எளிதாக ஏற்படுத்தும். இந்த மரபணு மாற்றம் கொண்ட நபர்கள் தங்கள் வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் கேன்சர் பாதிப்பிற்கு உள்ளாகலாம்.
இது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உயிரியலாளர் எட்விஜ் காஸ்பர் கூறுகையில், "குறிப்பிட்ட நபரிடம் இருந்து எத்தனை குழந்தைகளுக்கு விந்தணுக்களைப் பெறலாம் என்பதில் கட்டுப்பாடுகள் தேவை என்பதையே இது காட்டுகிறது. விந்தணு தானம் செய்யும் ஒவ்வொரு நபரிடமும் மரபணு சோதனை செய்வது முடியாத காரியம். இந்த இடத்தில் ஒரே நபரின் விந்தணுக்கள் பலருக்கும் பயன்படுத்தப்பட்டதாலேயே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இல்லையென்றால் இவ்வளவு பெரிய சிக்கல் உருவாகி இருக்காது" என்றார்.
எப்படி தெரிய வந்தது
தங்கள் குழந்தைகளுக்கு TP53 தொடர்புடைய கேன்சர் இருப்பது தெரிய வந்ததால் இரு குடும்பங்கள் தங்கள் கருவுறுதல் மருத்துவமனைகளை அணுகியுள்ளனர். அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான விசாரணையிலேயே இது தெரிய வந்தது. விந்தணு கொடுத்த நபரின் மாதிரிகளில் சோதனை செய்த போது அவருக்கும் TP53 மாற்றம் இருப்பது தெரிய வந்தது.
வாழ்க்கையே போச்சு
கடந்த 2008ல் அந்த நபர் முதலில் விந்தணுவை தானம் செய்துள்ளார். அப்போது TP53 மரபணு மாற்றம் கேன்சரை ஏற்படுத்தும் என்பது ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை. இதன் காரணமாகவே அதைத் தொடக்கத்திலேயே கண்டறிய முடியாமல் போய்விட்டது. இப்போது இந்த நபரின் விந்தணுவில் பிறந்த குழந்தைகள் காலம் முழுக்க மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.. தங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்பட்டதை நினைத்துப் பெற்றோர்கள் கண்ணீரில் கதறுகிறார்கள்.
ஐரோப்பிய விந்து வங்கியும் தனது வங்கியில் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களால் 67+ குழந்தைகளுக்கு TP53 மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும், ஒரு நபரின் விந்தணுக்களை எத்தனை பேருக்குப் பயன்படுத்தலாம் என்பது குறித்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அந்த நபரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications