இவங்க யாருக்கும் கொரோனா டெஸ்ட் பண்ணவே இல்லை.. ஏன்னா.. மிரள வைக்கும் இத்தாலி.. வெளியான உண்மை!
ரோம்: உலகையே வல்லரசாக அதிகாரத்தால் ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பிலும் முன்னிலை பெறும் வரை அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நாடு இத்தாலி.
Recommended Video
இப்போது அதிகாரப்பூர்வ கணக்கின் படி உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையில் 1,10,000 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் 13,211 பேருடன் முதல் இடத்தில் உள்ளது.
ஆனால், உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வ கணக்கை விட மிக மிக அதிகம் என கூறுகிறது ஒரு தகவல்.

இத்தாலி பாதிப்பு
சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் அடுத்து மிகத் தீவிரத்துடன் பரவிய நாடு இத்தாலி தான். கொரோனா வைரஸின் தீவிரத்தை உணராத அந்த நாடு மார்ச் முதல் வாரம் வரை மெத்தனமாக இருந்தது. இடையே அறிவித்த ஊரடங்கு உத்தரவை அந்த நாட்டு மக்கள் மதிக்கவில்லை.

கால்பந்து போட்டி
குறிப்பாக 45,000 ரசிகர்களுக்கு மத்தியில் பிப்ரவரி 19 அன்று மிலன் நகரில் நடந்த கால்பந்து போட்டியில் கொரோனா வைரஸ் பல ஆயிரம் பேருக்கு பரவியது. பின் சீனாவில் மட்டுமின்றி, இத்தாலியில் இருந்தும் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் என பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் வேகமாக பரவியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதற்கு இந்த ஐரோப்பிய நாடுகளும் முக்கிய காரணம்.

இத்தாலி எண்ணிக்கை
ஐரோப்பாவில் மையப் புள்ளியாக இருந்த இத்தாலி ஏப்ரல் 2 வரை 1,10,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,155 பேர் பலியாகி உள்ளனர். ஆனால், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கக் கூடும் என உள்ளூர் மருத்துவ, சுகாதார அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பரிசோதனை?
முதியோர் இல்லங்கள் மற்றும் வீடுகளில் உயிரழப்போரில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்படவில்லை. இத்தாலியில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவது தான் அதற்கு காரணம். மேலும், வயதானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவமனையில் இடம் அளிப்பதில்லை. அதே போல, பாதிப்பு உள்ளதா என தெரியாமல் இறந்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதும் இல்லை.

இரு மடங்கு
மார்ச் மாதத்தில் மிலன் நகருக்கு அருகே உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் 24 பேர் இறந்துள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படவில்லை. அதே போல, அருகே உள்ள லோதி என்ற இடத்திலும் இறந்தவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படவில்லை. அந்த நாட்டின் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆன பெர்காமோ, ப்ரேசியாவில் கணக்கிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட பலி எண்ணிக்கை இரு மடங்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

காத்திருக்க வேண்டிய நிலை
இது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தும் மருத்துவமனை செல்லாத பலர் இத்தாலியில் உள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் மருத்துவமனை செல்ல முடியாத நிலையில் உள்ளனர். ஏராளமானோர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விட்டு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.

பலி எண்ணிக்கை அதிகம்
இது போல கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்படாமல் இறப்போர் எண்ணிக்கை அதிகம். இது எதுவும் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கையில் சேர்க்கப்படுவது இல்லை. அதே போல, பாதித்தோர் எண்ணிக்கையும் சரியானது இல்லை.

பல லட்சம் இருக்கலாம்
மற்ற நாடுகள் போல கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்கிறது இத்தாலி. அங்கேயும் வயதானோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது இல்லை. அந்த வகையில் பார்த்தால் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,10,000 அல்ல, பல லட்சம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவமனைக்கு வெளியே..
இத்தாலியில் மருத்துவமனைக்கு வெளியே பலரும் படுக்கைகளில் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக அவர்களில் பலர் எந்த மருத்துவமும் கிடைக்காமல் இறக்கும் நிலை உள்ளது.

ஒரே ஆறுதல்
இத்தாலியின் இந்த மோசமான நிலையில் ஆறுதல் அளிக்கும் விஷயம் செவ்வாய் அன்று 1590 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளது தான். ஒரே நாளில் அதிக பேர் குணமடைந்திருப்பதும் இந்த நாளில் தான்.












Click it and Unblock the Notifications