ஒரு ஷாக் ரிப்போர்ட்.. சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பலி !
இஸ்லாமாபாத்: உலகில் தினமும் எங்கோ ஒரு மூலையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் நடந்த சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
துருக்கி:
துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஜூன் 20 ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 36 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பங்களாதேஷ்:
பங்களாதேஷ் நாட்டில் ஜூலை 7 ஆம் தேதி நடந்த ரம்ஜான் தொழுகையின் போது தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 75 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள். நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்து:
தாய்லாந்து நாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். வெளிநாட்டினர் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின் மூன்று மாகாணங்களில் அடிக்கடி சிறிய ரக குண்டுவெடிப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. ஆனால் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
சிரியா:
கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி விமானத்தில் இருந்து 'பேரல் பாம்' எனப்படும் பீப்பாய் குண்டுகள் வீசப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஈராக்:
ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கிர்கிஸ்தான்:
ஆகஸ்ட் 30 ஆம் தேதி கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானார், 3 பேர் காயம் அடைந்தனர்.
சோமாலியா:
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவில் அதிபர் மாளிகை அருகே கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் இத்தகைய தாக்குதல்களை அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பையினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று பாகிஸ்தானில் மார்டன் நகரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 52 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டில் வாரச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications