இலங்கைக்கு மீண்டும் சீனாவின் அபாய சங்கு- கடனை செலுத்தாத உகாண்டாவின் சர்வதேச விமான நிலையம் கபளீகரம்!
கம்பாலா: தம்மிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் உகாண்டா நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. சீனாவிடம் பெருந்தொகையிலான பணத்தை கடனாக வாங்கி ஏற்கனவே தமது நாட்டின் நிலப்பரப்புகளை சீனாவிடம் இழந்து இருக்கும் இலங்கைக்கு இது மிகப் பெரிய இன்னொரு எச்சரிக்கை மணி என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா, 2015-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து ரூ1,533 கோடி கடன் பெற்றது. என்டெபே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சீனாவிடம் இந்த கடனைப் பெற்றது உகாண்டா.
இது தொடர்பான ஒப்பந்தத்தில், தங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் என்டெபே சர்வதேச நிலையத்தை சீனா தன்வசமாக்கிக் கொள்ளலாம் என்கிற சரத்தும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் சீனாவுக்கு சுமார் ரூ1501 கோடி கடன் செலுத்த வேண்டியிருக்கிறது உகாண்டா.

உகாண்டா ஏர்போர்ட்
இதனால் சீனா, என்டெபே சர்வதேச விமான நிலையத்தை எப்படியும் கையகப்படுத்திவவிடும் என்கிற அச்சம் உகாண்டாவுக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டின் ஒப்பந்த சரத்தை ரத்து செய்வதற்கு சீனாவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது உகாண்டா. ஆனால் சீனா விட்டுக் கொடுப்பதாக இல்லை. உகாண்டாவுக்கு கொடுக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுவதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் இப்போது உகாண்டாவின் ஒரே சர்வதேச விமான நிலையமான என்டெபே ஏர்போர் இனி சீனாவின் சொத்தாக மாறப் போகிறது.

சீனா தந்த கடன்
சரி இதற்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு? உகாண்டாவை விட மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது சீனா. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளைவிட சீனாவை ஆகச் சிறந்த நட்பு நாடாக கொண்டாடியது இலங்கை. தமது நாட்டின் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக சீனாவிடம் குறுகிய கால கடன்களை ஏராளமாக வாங்கி குவித்தது இலங்கை. இத்தனைக்கும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கி இருந்தால் குறைவான வட்டிதான். ஆனால் சீனாவை மிகப் பெருமளவு நம்பியது இலங்கை. தற்போது இலங்கையின் பொருளாதாரம் அதளபாளத்தில் வீழ்ந்துவிட்டது. அன்னியசெலாவணி கையிருப்பும் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் விலையோ விண்ணை முட்டி நிற்கின்றன.

இலங்கை நிலப்பரப்புகள் அம்போ
சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம்தான் இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தை விரிவாக்கம் செய்தது. சர்வதேச கடல்வணிகத்தில் அம்பாந்தோட்டா துறைமுகம் முக்கியப் பங்களிப்பு செய்கிறது. இந்த துறைமுக திட்ட விரிவாக்கத்துக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை இலங்கை. இதனால் அம்பாந்தோட்டா துறைமுகம் சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது. அத்துடன் அந்த துறைமுகத்தை ஒட்டிய 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது இலங்கை. இதேபோல் கொழும்பு துறைமுக நகரமும் சீனாவின் வசமாகி இருக்கிறது. சீனாவின் இந்த மேலாதிக்கம் இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும்.

காலனி நாடாகுமோ இலங்கை?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சீனாவிடம் ரூ6,150 கோடி கடன் வாங்கியது இலங்கை. ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் அடுத்தடுத்த நிலப்பரப்புகளை சீனாவுக்கு கொடுத்து இலங்கைக்குள் சீனாவின் சுயாட்சி பிரதேசங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இதே நிலைமை தொடருமேயனால் ஒட்டுமொத்த இலங்கையும் வெகுசீக்கிரம் சீனாவின் காலனி பிரதேசமாக உருமாறி நின்றாலும் ஆச்ச்சரியமில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications