ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை மணக்கத் துடிக்கும் இங்கிலாந்து பெண்கள் – 8 பேர் சிரியா கிளம்பினர்!
லண்டன்: சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் இங்கிலாந்தை சேர்ந்த 8 மாணவிகள் சிரியாவுக்கு சென்றுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில், லண்டன் பள்ளியில் படிக்கும் ஷமிமா பேகம், கதிஜா சுல்தானா, அமிரா அபாஸி ஆகிய மூன்று சிறுமிகள் லண்டனில் இருந்து இந்த மாதத்தில் சிரியாவுக்கு சென்றுள்ளனர்.
மற்றொரு மாணவி கடந்த டிசம்பர் மாதம் சென்றதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் தீவிரவாதி மணமகன்கள்:
இது மட்டுமின்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்காக மணமகள் தேடும் ஆன் லைன் வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து பெண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போட்டி போடும் பெண்கள்:
இதில், குறிப்பிட்ட ஒரு தீவிரவாதியை திருமணம் செய்து கொள்ள மட்டும் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் மணம்:
கடந்த ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த இரட்டை பிறவிகளான சல்மா மற்றும் சாரா ஹலானே ஆகியோர் இதேபோல் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சிரியாவுக்கு சென்றனர். தங்களுக்கு பிடித்த, பொருத்தமான துணைவரை திருமணம் செய்தும் கொண்டனர்.
விரும்பி விதவைகளான இரட்டையர்கள்:
குர்தீஷ் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பன்னாட்டு படைகளின் குண்டு வீச்சில் இவர்களின் கணவர்கள் பலியாகிவிட, தற்போது இந்த இரு பெண்களும் சிரியாவில் விதவைகளாக இருக்கும் அதிர்ச்சி தகவலையும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.