துப்பாக்கிச்சூடு சம்பவங்களை பார்த்து பார்த்து அமெரிக்காவுக்கு மரத்துவிட்டது: ஒபாமா வருத்தம்
வாஷிங்டன்: அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லை என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள உம்பக்வா சமூகக் கல்லூரியில் 26 வயது கிறிஸ் ஹார்பர் மெர்சர் என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியாகினர். அதன் பிறகு கிறிஸ்ஸை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
குழந்தைகளை கட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ள அதிர்ஷ்டசாலிகள் குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினர் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தால் மட்டும் போதாது. சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
பிறரை கஷ்டப்படுத்த நினைப்பவர்களின் கைகளில் துப்பாக்கி எளிதில் கிடைக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதை பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்டது. கல்லூரியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அதை எதற்காக செய்தார் என தெரியவில்லை. அவருக்கு மனநலம் சரியில்லை என்று யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.
அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லை. அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கும் முன்னேறிய நாடு நம் நாடு மட்டும் அல்ல.
சுரங்க விபத்தில் அமெரிக்கர்கள் பலியானால் சுரங்கங்களில் பாதுகாப்பை பலப்படுத்துகிறோம். சாலைகள் சரியில்லை என்றால் சரியாக்குகிறோம். விபத்துகளில் பலர் பலியாவதை தடுத்த சீட் பெல்ட் அணியும் சட்டம் கொண்டு வந்தோம். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க உரிய சட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி சிந்திக்குமாறு அமெரிக்க மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications