ரஷ்யாவில் சுனாமியை உருவாக்கிய நிலநடுக்கம் அரிதானது.. ஆனால் அசாதாரணமானது அல்ல! விஞ்ஞானிகள் விளக்கம்
மாஸ்கோ: ரஷ்யாவின் காம்சட்காவில் நேற்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் சுனாமியும், எரிமலை வெடிப்பும் கூட எற்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்த விஞ்ஞானிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா தீபகற்பத்தில் 3-4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்தன. ஹவாயில் சுமார் ஐந்து அடி உயரமும், ஜப்பானில் சுமார் இரண்டு அடி உயரமும் அலைகள் பதிவாகின. பல இடங்களில் வெள்ளம் மற்றும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதேபோன்று கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அந்த நிலநடுக்கமும் பெரிய சுனாமியை ஏற்படுத்தியது. மேலும், ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்கு வழிவகுத்தது.
கடந்த 20 ஆண்டுகளில் 8.5 ரிக்டர் அளவுக்கு அதிகமான அளவில் ஐந்து நிலநடுக்கங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை நிகழ்வு அரிதானது என்றாலும், உலகின் அதிக நிலநடுக்கம் அபாயம் உள்ள பகுதியில் இது நிகழ்ந்துள்ளது. கம்சட்கா தீபகற்பம், "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படும் நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த நில அதிர்வுப் பகுதி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையும், மேற்குப் பகுதியில் தூர கிழக்கு மற்றும் ஓசியானியா நாடுகளும் உள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ, சிலி, பெரு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இதில் அடங்கும். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, உலகின் மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 80% க்கும் அதிகமானவை இந்த நெருப்பு வளையத்தில் தான் ஏற்படுகின்றன.
1960 ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் 1964 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகியவை இந்த வளையத்தில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களாகும். கடந்த 20 ஆண்டுகளில் பதிவான 8-க்கும் அதிகமான ரிக்டர் அளவிலான 23 நிலநடுக்கங்களும் இந்த நில அதிர்வுப் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளன.
வடக்கில் கம்சட்கா தீபகற்பத்தில் இருந்து தெற்கில் வடக்கு ஜப்பான் வரை சுமார் 2,000 கி.மீ தூரம் வரை நீண்டுள்ள பகுதியில், ரஷ்யாவின் எரிமலை வெடிப்புள்ள குரில் தீவுகள் உட்பட, 1900 ஆம் ஆண்டு முதல் 7-க்கும் அதிகமான ரிக்டர் அளவிலான 130 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக யுஎஸ்ஜிஎஸ் தரவுகள் காட்டுகின்றன. 1952 இல், இந்த பிராந்தியத்தில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
பசிபிக் தட்டு கண்ட நிலப்பரப்புடன் மோதுவதால், இந்த பகுதியில் அதிக அளவில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த மோதல் காரணமாக இரண்டு தட்டுக்களில் ஒன்று உள்வாங்கிக்கொள்ளும். உள்வாங்குதல் என்பது ஒரு புவியியல் செயல்முறையாகும். இதில் ஒரு டெக்டோனிக் தட்டு - பூமியின் மேலோட்டத்தின் ஒரு பெரிய பகுதி - மற்றொன்றுக்கு எதிராக அழுத்துகிறது.
பொதுவாக, கனமான அல்லது அடர்த்தியான தட்டு, அதாவது ஒரு அலகு பரப்பளவில் அதிக நிறை கொண்ட தட்டு, இலகுவான தட்டின் கீழே செல்லும். ஆனால் இந்த செயல்முறை சிதைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் தட்டு எல்லைகளில் பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த அழுத்தமே நிலநடுக்கங்களாக வெளிப்படுகிறது. இந்திய தட்டு யூரேசிய தட்டுக்கு எதிராக தள்ளுவதால் இமயமலை உருவானது. இதனால் தான் இமயமலைப் பகுதி உலகின் அதிக நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
பசிபிக் நெருப்பு வளையம் பூமியின் மூன்று பெரிய நிலநடுக்க மண்டலங்களில் ஒன்றாகும். இந்தோனேசியாவில் இருந்து இமயமலை வழியாக ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி வரை நீண்டு செல்லும் ஆல்ஃபைடு பெல்ட், உலகின் இரண்டாவது நிலநடுக்கம் அபாயம் உள்ள மண்டலமாகும். ஆனால் பெரிய நிலநடுக்கங்களில் சுமார் 80% நெருப்பு வளையத்தில் ஏற்படுகின்றன. ஆல்ஃபைடு பெல்ட் 15-17% மட்டுமே பங்களிக்கிறது என்று யுஎஸ்ஜிஎஸ் கூறுகிறது.
இருப்பினும், இந்த பெல்ட் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சில பகுதிகளை கடந்து செல்கிறது. இது இப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. பொதுவாக, வலுவான நிலநடுக்கங்கள் பெரும்பாலும் கடலுக்கு அடியில் ஏற்பட்டாலும், நிலத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பலவீனமாக இருந்தாலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால் மிகவும் ஆபத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications