பறந்து வந்த ரஷ்ய ஏவுகணை! பிரிட்டன், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் துவம்சம்..! உக்ரைனுக்கு பின்னடைவு?
கீவ் : உக்ரைனுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஆயுதங்களை வைத்திருந்த கிடங்குகளை ரஷ்யா அழித்துள்ள நிலையில், போலந்து பல்கேரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய எரிவாயு சப்ளையை நிறுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் அறிவித்து கிட்டத்தட்ட 65 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத்தினர் கடுமையாக போர் தொடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழக்கு பகுதிகளில் கடுமையான போர் மூண்டுள்ளது.
அதிகளவு ஆயுதம் மற்றும் ராணுவம் இல்லாத போதும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதவிகள் மூலம் எதிர் தாக்குதலை உக்ரைன் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் போர் இன்று வரை நீடிக்கிறது.
விடாது துரத்தும் ரஷ்யா! விட்டுக் கொடுக்காத உக்ரைன்! நேரடியாக களத்தில் இறங்குமா அமெரிக்கா?
உக்ரைன் போர்
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் கடந்த பல நாட்களாக உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு பண உதவி மற்றும் ஆயுத உதவியை அளித்து வருகின்றன.
ஆயுதங்கள் அழிப்பு
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே உள்ள கிடங்கில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆயுதங்கள் பதுக்கலை செயற்கைக்கோள் படங்கள் மூலமாக கண்டறிந்த ரஷ்யா, கடல் தாண்டி தாக்குதல் காலிபர் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட நவீன ஆயுதங்கள் அழிக்கப்பட்டதன் மூலம் போரில் உக்ரைன் பின்னடைவை சந்தித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.
அதிர்ச்சி அளித்த ரஷ்யா
இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெரும் எரிவாயுவுக்கு அமெரிக்காவின் டாலரில் இல்லாமல் ரஷ்யாவின் ரூபிளில் செலுத்த வேண்டும் என ரஷ்யா கூறியது. காரணம் ரஷ்ய பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகள் மற்றும் உலகளவில் பொருளதார தடை விதித்ததே காரணம். இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ரூபிளில் பணத்தை வழங்க மறுப்பு தெரிவித்தன.
எரிவாயு நிறுத்தம்
இதையடுத்து அந்த இரு நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இரு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.