பாலஸ்தீன விவகாரத்தில் 'பேக்' அடித்த இஸ்ரேல்.. சிரிக்கும் சிரியா! ரஷ்யா எடுத்த 'அதிரடி' நடவடிக்கை
டமாஸ்கஸ்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சிரியாவில் ரஷ்யா தனது ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்கி வருகிறது.
ஒடுக்குமுறை: இஸ்ரேலால் காலங்காலமாக ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. ஆனால் அகதிகளாக வந்த யூதர்களோ இந்த குரல்களை நசுக்கி இஸ்ரேல் எனும் நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றனர். இதன் விளைவு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவாகி அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதுதான் சாக்கு என இஸ்ரேலும், மேற்கு நாடுகளும் இந்த அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அதன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியது.

தாக்குதல்: இதன் தொடர்ச்சியாகதான் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 7ம் தேதியன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்', இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணை ஏவியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.
பிரிட்டன், அமெரிக்கா: இந்நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் பங்காளி நாடான அமெரிக்கா, தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் இளைய பங்காளியான பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப முயன்று வருகிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த பலத்தை புரிந்துக்கொண்ட இஸ்ரேல் காசா எனும் பகுதி முற்றிலுமாக தடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது.
சிரியா: இதற்கிடையில் ஹமாஸ் அமைப்புக்கு சிரியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்வதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், அந்நாட்டின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மீது திடீரென குண்டுகளை வீசியது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லையென்றாலும், இந்த விவகாரம் சிரியாவையும் போருக்குள் இழுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. எனவே இந்த சூழலை சமாளிக்க ரஷ்யா ஏற்கெனவே தனது போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சில ராணுவ தளவாடங்களையும் சிரியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
ரஷ்யா: அதாவது ரஷ்யா ராணுவத்தின் மூன்றாம் தலைமுறை டாங்கிகளான T-90, T-72, T-55, காலாட்படை சண்டை வாகனம் (Infantry fighting vehicle) பிடிஆர்(BTR) வாகனங்கள், சிறிய வகை ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்கிகளுக்கு எதிரான ஆயுதங்கள், பெரிய ஏவுகணைகளை பொறுத்த அளவில், S-300, S-400, Pantsir-S1, Buk-M2 ஆகியவை சிரியாவுக்குள் வந்து சேர்ந்திருக்கிறது. இவை அனைத்தும் சில நூறு கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை குறி தவறாது தாக்கும் திறன் கொண்டதாகும். இதில் S-400 எனும் ஏவுகணை அமைப்பை இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவிடமிருந்து வாங்கியிருந்தது.
ராணுவ தளவாடங்கள்: போர் விமானங்களை பொறுத்த அளவில், சுகோய் பிரிவில், Su-24, Su-25, Su-30, Su-34, மற்றும் Su-35 ஆகிய போர் விமானங்களும், Mi-24 மற்றும் Mi-35 வகை தாக்குதல் ஹெலிகாப்டர்களும், Mi-24 மற்றும் Mi-35 வகை டிரான்ஸ்போர்ட் ஹெலிகாப்டர்களும், Il-76 வகை கார்கோ விமானங்களையும் சிரியாவில் ரஷ்யா தரையிறக்கி இருக்கிறது. கடற்படையை பொறுத்த அளவில் போர் கப்பல மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை ரஷ்யா மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்தியுள்ளது. இஸ்ரேல்-பாஸ்தீன பிரச்னைக்கு சுதந்திர பாலஸ்தீனம்தான் நிரந்தர தீர்வு என ரஷ்யா கூறி வரும் நிலையில், இந்த போர் தீவிரமானால் நிச்சயம் ரஷ்யா இதில் குதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல இஸ்ரேலும் இப்போது காசாவுக்குள் நுழைய வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications