"2014இல் நடந்த அதே விஷயம்!" ரஷ்யா போட்டுள்ள பக்கா ஸ்கெட்ச்! ஆதாரத்துடன் எச்சரிக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Recommended Video
கம்யூனிச நாடுகளில் ஒன்றாக இருந்த சோவியத் ஒன்றியம் கடந்த 1991ஆம் ஆண்டு வீழ்ச்சி அடைந்தது. அப்போது ரஷ்யா, உக்ரைன் பெலராஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவானது.
இருப்பினும், ரஷ்யா அதிபர் புதின் மீண்டும் சோவியத் யூனியன் கட்டமைக்க முயன்று வருவதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

உக்ரைன் பதற்றம்
அதற்கேற்ப இப்போது முன்னாள் சோவியத் நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால் எல்லையில் ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என்றும் இதற்கான நடவடிக்கைகளில் தான் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகவும் மேற்குலக நாடுகள் தொடர்ந்து சாடி வருகின்றனர்.

ரஷ்யா விளக்கம்
இருப்பினும், ரஷ்யா இதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தே வருகிறது. உக்ரைனை ஆயுதமாகப் பயன்படுத்தி ரஷ்யாவை ஒடுக்க அமெரிக்கா முயல்வதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே ஒவ்வொரு முடிவும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் விரைவில் உக்ரைன் விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

என்ன காரணம்
முன்னாள் சோவியத் நாடுகளில் ஒன்றான உக்ரைன் கடந்த சில ஆண்டுகளாகவே மெல்ல ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சென்று வருகிறது. உக்ரைன் நாட்டில் கடந்த சில தேர்தல்களில் ஐரோப்பாவுக்கு ஆதரவாக உள்ள அரசுகளையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் இணைவதிலும் உக்ரைன் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியானது.

ரஷ்யா உக்ரைன் உறவு
இது ரஷ்யாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், புவியியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ரஷ்யாவுடன் உக்ரைன் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் உக்ரைனில் ரஷ்ய மொழி தான் பரவலாகப் பேசப்படுகிறது. இப்படி இருக்கும்போது, உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் இணக்கமாக இருப்பதை ரஷ்யா, குறிப்பாக அந்நாட்டின் அதிபர் புதின் விரும்பவில்லை.

புதின் நிபந்தனை
மேலும், புவியியல் ரீதியாகவும் உக்ரைன் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என இரு நாடுகளுடனும் உக்ரைன் தனது எல்லையைப் பகிர்ந்து உள்ளதால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் அது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என ரஷ்யா கருதுகிறது. இதனால் ரஷ்ய அதிபர் புதின், நேட்டோ அமைப்பை விரிவாக்கம் செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை அறிவித்திருந்தார். இருப்பினும், நேட்டோவில் இணைவது தொடர்பான முடிவை உக்ரைன் தான் எடுக்க வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கூறி வருகிறது.

முதல் எச்சரிக்கை
இந்தச் சூழலில் தான் உக்ரைன் எல்லையில் தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது ரஷ்யா. மேலும், ராணுவ வீரர்களுக்கான அங்கு மருத்துவ முகாம்களையும் அமைக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக நிரந்தர ராணுவ முகாம் உள்ள இடங்களில் அல்லது போர் ஏற்படும் சமயங்களில் தான் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். அதேபோல எல்லையிலேயே ராணுவ பயிற்சிகளையும் ரஷ்ய ராணுவம் தொடங்கியுள்ளது. இது தான் முதல் எச்சரிக்கை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

2014இல் நடந்தது
இதையெல்லாம் தாண்டி இப்போது உக்ரைன் தொடர்பாகவும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சில பிரசார வீடியோக்களை ரஷ்யா வெளியிடத் தொடங்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா மீது படையெடுத்து ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது, இதேபோன்ற பிரசார வீடியோக்களை ரஷ்யா வெளியிட்டிருந்தது. எனவே, இது போருக்கான ஒரு சமிக்ஞை என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன திட்டம்
உக்ரைன் படையெடுப்பை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்யா போலியான பிரசார வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் தற்போது உள்ள சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போர் தொடுக்காது என்றும் இருப்பினும், உக்ரைன் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பதுமே ரஷ்யாவின் திட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பொருளாதாரத் தடைகள்
நிலைமை எப்போது வேண்டுமென்றாலும் கையை மீறிப் போகலாம் என்பதால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் உக்ரைன் நாட்டுத் தூதரகத்தில் உள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்களைத் திரும்ப அழைத்துள்ளது. மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க உள்ளதாகவும் பல்வேறு மேற்கு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications