இமைகள் கூட உறைந்து போகும் அளவு கடும் பனி... -67 டிகிரி குளிரால் உறைந்தது ரஷ்யா!
ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் கண் இமைகள் கூட உறைந்து போகும் அளவிற்கு பொழிந்த கடுமையான பனிப்பொழிவை வெளிப்படுத்தும் இளம்பெண்ணின் புகைப்படம் காண்போரையும் உறைய வைக்கிறது.
Recommended Video
மாஸ்கோ : தெர்மாமீட்டரில் அளவிடுவதற்கு கூட வழியில்லாத அளவிற்கு ரஷ்யாவின் யாகுதியாவில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. யாகுதியாவில் அதிக அளவாக மைனஸ் 67 டிகிரி வெப்பநிலை பதிவாக எஞ்சிய பகுதிகளில் மைனஸ் 88.6 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 3,300 மைல் தொலைவில் உள்ளது யாகுதியா பகுதி. இங்கு சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர், அன்றாட இந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்கள் மைனஸ் 40 டிகிரி உறைநிலையிலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் மிகக் குறைந்த அளவே வெப்பநிலை பதிவானதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்கும்படி காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக் கொண்டனர்.
ஓய்மகானில் மைனஸ் 88.7 டிகிரி
புவியிலே மிகுந்த குளிர் பிரதேசமான ஓய்மகான் கிராமத்தில் வெப்பநிலையை பதிவு செய்ய முடியாத அளவிற்கு தெர்மாமீட்டர் அளவுகோலுக்கு கீழே வெப்ப நிலை சென்று விட்டதாக ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் ஓய்மகானில் மைனஸ் 98 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது.
பனியில் உறைந்து 2 பேர் பலி
கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த வாரத்தில் இரண்டு பேர் இறந்துள்ளார். காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் பகுதானதால் வெளியே இறங்கி அருகில் இருந்த பார்மிற்கு செல்வதற்குள் பனியில் உறைந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
பனிப்பொழிவு அதிக அளவில் இருப்பதால் யாகுதியா மக்கள் சென்ட்ரல் வெப்ப கருவியின் கீழ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மாகாண ஆளுனர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு தேவையான பேக் அப் பவர் ஜெனரேட்டர்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சாத மக்கள்
யாகுதியா மக்கள் எந்த குளிராக இருந்தாலும் அதனை கண்டு அஞ்சியதில்லை என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில சீன கல்லூரி மாணவிகள் உறைபனியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
|
காண்போரை உறைய வைக்கும் செல்ஃபி
கண் இமைகூட உறைந்துவிடும் அளவிற்கு இமை முடிகளை சுற்றிப் படிந்துள்ள பனியுடம் இருக்கும் இளம்பெண்ணின் க்ளோஸ் அப் செல்ஃபி காண்போரையும் உறைய வைத்துவிடும். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.