ரஷ்ய பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு.. மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலி... பரபர வீடியோ
மாஸ்தோ: ரஷ்யாவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென சக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலைத் தேசிய புலனாய்வு சட்ட அமலாக்க முகமை உறுதி செய்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிழக்கிலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்ம் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களின் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, ரஷ்ய காவல்துறை அவரை கைது செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் அதே பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்று வருகிறார் என்பதை ரஷ்ய புலனாய்வு கமிட்டி உறுதி செய்துள்ளது.
|
பரபர வீடியோ
இதற்கிடையே, கொலை குறித்து தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க முதல் தளங்களில் உள்ள ஜன்னல்களிலிருந்து அவர்கள் குதிப்பது பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு மாணவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், "துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை வகுப்பறைகளுக்குள் நுழைவதைத் தடுக்க நாற்காலிகள் கொண்டு கதவுகளில் தடுப்புகளை எழுப்பினோம். அப்போது வகுப்பறைகளில் கிட்டத்தட்ட 60 மாணவர்கள் இருந்தோம்" என்றார்.
|
8 பேர் பலி
துப்பாக்கிச் சூடு நடந்த அந்த சமயத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 6 மாணவர்கள் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாக ரஷ்யப் புலனாய்வுக் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 24 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என பெர்ம் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதில், 19 பேர் துப்பாக்கிச் சூட்டிலும் மற்றவர்கள் ஜன்னலில் இருந்து குதிக்கும்போதும் காயம் அடைந்தவர்கள் ஆவர்.

ரஷ்யா கட்டுப்பாடுகள்
ரஷ்யாவில் துப்பாக்கி உரிமத்தைப் பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்காப்பு, காட்டில் வேட்டையாடுவது, விளையாட்டு ஆகிய காரணங்களுக்காகத் துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உரிமம் பெறுவதற்காக அரசு வைக்கும் சோதனைகளில் தேர்வு அடைபவர்களுக்குத் துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து விளைவிக்காத ரப்பர்களைக் குண்டுகளாகப் பயன்படுத்தும் துப்பாக்கிகளையே அந்த மாணவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகவலை ரஷ்யா போலீசார் உறுதி செய்யவில்லை.

அரிதான நிகழ்வு
ஆனால், இந்த ரப்பர் குண்டு துப்பாக்கிகளை மிக எளிமையாக வழக்கமான குண்டுகளைப் பயன்படுத்தும் துப்பாக்கிகளாகவும் மாற்றலாம். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது ரஷ்யாவை பொருத்தவரை அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது. முன்னதாக, இந்தாண்டு மே 11ஆம் தேதி, கசானில் உள்ள பள்ளியில் டீனேஜர் ஒருவர் 7 குழந்தைகள் 2 ஆசிரியர்களைக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னரே ரஷ்யாவில் துப்பாக்கி உரிம சட்டம் கடுமையாக்கப்பட்டது.

ரஷ்யாவில் பரபரப்பு
கசான் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, துப்பாக்கி வைத்துக் கொள்பவர்களின் வயது வரம்பு 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் இந்த புதிய சட்டம் இன்னும் அமலாக்கப் படவில்லை. 2018ஆம் ஆண்டு கிரீமியாவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 20 பேர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ரஷ்யாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடாக இது கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications