ஆப்கான்-பாகிஸ்தான் மோதல்.. சமாதானம் பேசும் ரஷ்யா! பின்னால் இருக்கும் இப்படி ஒரு காரணம்!
காபூல்: ஆப்கானிஸ்தானுடன், பாகிஸ்தான் மோதலில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே இரண்டு போர்களால் உலகம் பாதிக்கப்பட்டிருப்பதால், மூன்றாவது ஒரு போரை தவிர்க்க அனைத்து தரப்பினரும் முயன்று வருகின்றனர். இப்படி இருக்கையில், மோதலை கைவிட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா சொன்னது என்ன?: ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஆப்கான்-பாகிஸ்தான் மோதல் குறித்து தங்கள் நாடு கவலை தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

"ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல் குறித்து நாங்கள் கவலை அடைந்திருக்கிறோம். ராணுவ வீரர்களை தாண்டி பொதுமக்கள் கைகளிலும் துப்பாகிகள் இருப்பதை நாங்கள் வருத்தத்துடன் பார்க்கிறோம். பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கிறோம்" என்று கூறியுள்ளதாக ரஷ்ய ஊடகமான TASS செய்தியை வெளியிட்டிருக்கிறது.
ஆப்கான்-பாக். மோதல்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் பக்கத்து நாடு போல, பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பக்கத்து நாடாக இருக்கிறது. எல்லைக்கோடுகள் என்று இருந்தாலே அதில் முட்டல் மோதல்கள் இருக்கத்தானே செய்யும்? இதே காரணத்திற்காகத்தான் ஆப்கான்-பாக் இடையே மோதல் வெடித்திருக்கிறது. அதாவது ஆப்கானிஸ்தானிலிருந்து 'டெகரிக் இ தாலிபான்' (Tehrik-i-Taliban Pakistan) எனும் தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாகவும், அதற்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதல்: இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பாகிஸ்தான் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 46 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம், தீவிரவாதிகளின் அடைக்கலமாக இருந்த பகுதி என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் இதனை மறுக்கிறது. மட்டுமல்லாது தாக்குதல் நடத்தப்பட்ட இடம் அகதிகள் முகாம் என்றும், உயிரிழந்தது அப்பாவி பொதுமக்கள் என்றும் கூறுகிறது.
பதிலடி தாக்குதல்: பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, குர்ரம் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை தாலிபான்கள் தாக்கினர். இதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். இப்படி மாறி, மாறி இரண்டு நாடுகளும் தாக்கிக்கொண்ட சம்பவம் வடமேற்கு ஆசியாவில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்குமோ என்று அச்சம் எழுந்தது. இப்படி இருக்கையில்தான் மத்தியஸ்தம் செய்ய ரஷ்யா உள்ளே வந்திருக்கிறது.
ரஷ்யா ஏன் மத்தியஸ்தம் செய்கிறது?: சமாதானம் செய்ய ரஷ்யா தலையீடு செய்திருப்பதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. அதாவது தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் நுழைய வேண்டும் எனில் அதற்கு கேட் வே (Gate way) ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும்தான். எனவே இந்த பகுதிகளில் வர்த்தகம் செய்வதற்கு இரு நாடுகளின் கூட்டாண்மை அவசியமானதாகும். எனவேதான் "சண்டை போடாதீங்க ஏட்டையா" என்கிற டோனில் ரஷ்யா சமாதானம் சொல்கிறது.
இது தவிர வேறு சில முக்கியமான பாசிடிவ் விஷயங்களும் ரஷ்யாவுக்கு, ஆப்கன்-பாகிஸ்தான் மூலம் கிடைக்கிறது. அதாவது ஆசியாவில் நேட்டோவின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் எனில், அதற்கு சமமான அல்லது அதை விட பலமான ஒரு படை இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தனும்-பாகிஸ்தானும் தங்கள் ராணுவத்தில் வலிமையாக இருந்தால்தான் நேட்டோவுக்கு சவால்விட முடியும். எனவேதான் சண்டை போட்டுக்கொள்ளாமல் சமாதானமாக இருக்க ரஷ்யா விரும்புகிறது.
இயற்கை எரிவாயு சப்ளை: துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) எரிவாயு குழாய் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த விஷயத்தில் ரஷ்யாவுக்கு நேரடியாக பலன் கிடையாது. ஆனால், துர்க்மெனிஸ்தான், ரஷ்யாவின் நட்பு நாடு என்பதால் அதை வைத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை TAPI திட்டத்தின் மூலம் நட்பு நாடுகளாக்கிக்கொள்ள முடியும்.
ஆக இப்படியான பின்னணியில்தான் ஆப்கன்-பாகிஸ்தான் போரை ரஷ்யா வேண்டாம் என்று கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications