24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை
மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார்.
மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளார். மேலும், கடந்த 2003ஆம் ஆண்டில் ரஷ்யாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பிரான்சின் லெஜியன் டி ஹொன்னூர் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.
காதலியை கொன்ற பேராசிரியர்
இவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது கல்லூரி காதலியான 24 வயதான அனஸ்தேசியா யெஷென்கோவை கொலை செய்த குற்றச்சாட்டிற்காகக் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
காதலியின் கையுடன் சுற்றியவர்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மொய்க்கா ஆற்றின் அருகே இவர் கைது செய்யப்பட்டபோது மதுபோதையிலிருந்த இவரிடம் இளம் பெண்ணின் கைகளும் ஆயுதங்களும் இருந்தன. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கு விசாரணை, கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
மாணவிகள் புகார்
ஓலெக் சோகோலோவ் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே அவர் மீது பல மாணவிகள் புகாரளித்திருந்தனர்.
கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட பேராசிரியர்
வழக்கு விசாரணையின் போது தனது கல்லூரி காதலியைக் கொலை செய்ததை வரலாற்றாசிரியர் ஓலெக் சோகோலோவ். ஒப்புக்கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது தான் இந்த குற்றத்தைச் செய்ததாகக் கூறினார்.
12.5 ஆண்டுகள் சிறை
கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற ஓலெக் சோகோலோவ்விற்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஓலெக் சோகோலோவின் வழக்கறிஞர் செர்ஜி லுக்கியானோவ், தண்டனை காலத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் முழு தீர்ப்பின் நகலைப் பெற்றவுடன் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.