பணத்தை மிச்சம்பிடிக்க விமானத்தில் குறைந்த எரிபொருள்.. நடுவானில் காலியானதால் திக்திக்! அடுத்து என்ன
லண்டன்: நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் திடீரென விமானம் காலியானால் எப்படி இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது பிரிட்டனில் நடந்துள்ளது. இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் கிட்டத்தட்ட எரிபொருள் காலியாகியுள்ளது. அப்போது சரியான நேரத்தில் விமானிகள் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பொதுவாக கார் அல்லது பைக்கில் செல்லும்போது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டால் அருகே இருக்கும் பெட்ரோல் நிலையம் வரை வண்டியைத் தள்ளிக் கொண்டே போய் பெட்ரோல் போடுவோம். ஆனால், விமானத்தில் அதுபோல எரிபொருள் காலியானால் அது என்னவாகும்.. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

ரயன் ஏர் விமானம்
இத்தாலியின் பீசா நகரிலிருந்து ஸ்காட்லாந்தின் பிரெஸ்ட்விக் (PIK) நோக்கிச் சென்ற ரயன் ஏர் விமானம் சென்று கொண்டு இருந்தது. எல்லாமே சரியாகவே இருந்துள்ளது. இருப்பினும், தரையிறங்க வேண்டிய கிளாஸ்கோ பிரெஸ்ட்விக் விமான நிலையம் அருகே புயல் இருந்ததால் காற்று பலமாக வீசியுள்ளது. இதனால் விமானத்தைச் சரியாக முறையில் தரையிறக்க முடியவில்லை.
இருமுறை தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முயற்சியும் கைவிடப்பட்டது. நிலைமை சீராகும் என்று அங்கேயே கொஞ்ச நேரம் விமானம் வட்டமடித்து வந்துள்ளது. இருப்பினும், நிலைமை எதுவும் சீராகவில்லை. இதையடுத்து அருகே இருக்கும் விமான நிலையத்திற்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட எரிபொருள் காலி
விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்தபோதிலும், வேறு வழியில்லை என்பதால் அருகே உள்ள விமான நிலையத்திற்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அப்போது நடுவானிலேயே விமானத்தின் எரிபொருள் கிட்டத்தட்ட காலியாகும் சூழல் ஏற்பட்டது. அந்த போயிங் 737 ரக விமானத்தில் எரிபொருள் காலியாக 6 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. நிலைமை உணர்ந்த விமானிகள் "மேடே" அவசர அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து விமானம் பலமுறை வட்டமிட்ட பிறகு, மான்செஸ்டரில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய போது அதில் வெறும் 220 கிலோ எரிபொருளே மட்டுமே இருந்துள்ளது. 220 கிலோ கம்மியா என நீங்கள் கேட்கலாம்.. பல நூறு கிலோ எடை கொண்ட விமானம் பறக்க ஒவ்வொரு நிமிடமும் பல கிலோ எரிபொருள் செலவாகும். இந்த 220 கிலோ என்பதால் வெறும் ஆறு நிமிடங்களுக்கு மட்டுமே போதுமானதாகும்.
சிக்கல் என்ன?
வழக்கமாக பீசா நகரில் இருந்து பிரெஸ்ட்விக் செல்ல 2.20 மணி நேரமே ஆகும். ஆனால், புயல் காரணமாக நீண்ட நேரம் விமானம் வட்டமிட வேண்டி இருந்தது. அதன் பிறகே பக்கத்தில் இருக்கும் ஏப்போர்ட்டில் அது தரையிறங்கியுள்ளது. மொத்தமாக விமானம் 4 மணிநேரம் 23 நிமிடங்கள் வானில் பறந்துள்ளது. திட்டமிடப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக நேரம் விமானம் வானில் பறந்ததே எரிபொருள் குறையக் காரணமாக இருந்துள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததை உறுதி செய்துள்ள ரயன் ஏர் நிர்வாகம், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதற்கு ரயன் ஏர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
விமானத்தைப் பொறுத்தவரை கூடுதலாக அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோவும் கூடுதலாக எரிபொருள் செலவாகும். இதனால் விமான நிறுவனத்திற்குச் செலவு அதிகம். இதனால் ஒட்டுமொத்த எடையைக் கணக்கிட்டே விமான நிறுவனங்கள் எரிபொருளை நிரப்பும். அதிலும் ரயன் ஏர் நிறுவனம் இதைத் துல்லியமாகக் கணக்கிட்டு எவ்வளவு எரிபொருள் தேவை.. மேலும் எமெர்ஜென்சிக்கு எவ்வளவு எரிபொருள் இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டே எரிபொருள் நிரப்பும். இதன் காரணமாகவே இக்கட்டான சூழலுக்கு அந்நிறுவனத்தின் விமானம் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications