பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை: சவுதி அரேபிய அரசு அதிரடி
பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

ரியாத்: பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டது, அதேபோல் கால்பந்து போட்டிகளை காணவும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி கடிதம் வேண்டும்
அந்த வகையில் தற்போது பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் பெண்கள் தொழில் தொடங்க ஆண் பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும். அதாவது கணவர், தந்தை அல்லது சகோதரர் அனுமதி கடிதத்தை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

எந்த தடையும் இல்லை
தற்போது பெண்கள் தொழில் தொடங்க இத்தகைய அனுமதி கடிதம் தேவையில்லை. பெண்கள் சுயமாக தொழில் தொடங்க எந்த தடையும் இல்லை என சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் குவிந்துள்ளன
சவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

மூன்றில் ஒரு பங்கு
சவுதி அரேபியாவில் 22 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்; இதை, 2030க்குள், மூன்றில் ஒரு பங்காக உயர்த்த இளவரசர் முகமது பின் சல்மான் முடிவு செய்துள்ளார். அதற்காக பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications