ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை- ஈரானில் செளதி தூதரகங்கள் தீக்கிரை! இருநாட்டு தூதரக உறவு துண்டிப்பு!!
ரியாத்/ டெஹ்ரான்: செளதியில் அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டம் வெடித்தது. ஈரானில் உள்ள செளதி தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஈரானுடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக செளதி அரேபியா அறிவித்துள்ளது.
செளதி அரேபியாவில் நேற்று முன்தினம் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் ஷியா பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஈராக், ஈரான், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

செளதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற போராட்டத்தின் போது செளதி அரேபியாவின் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அப்போது செளதி தூதரகத்தை போராட்டத்தில் ஈடுபட்டோர் தீயிட்டு கொளுத்தினர். மேலும் மஷாத் நகரத்தில் உள்ள செளதி துணை தூதரகமும் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரானுடனான தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்வதாக செளதி அரேபியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செளதி அரேபியா வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபைர், ஈரானில் உள்ள செளதி அரேபிய தூதரகத்தில் இருந்து அனைத்து ஊழியர்களும் உடனே நாடு திரும்புவர்; செளதி அரேபியாவில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணிநேரத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். மேலும் ஈரானின் வரலாறு நெடுகவும் அரபு நாடுகளுடன் மோதல் போக்கைத்தான் கடை பிடித்து வந்துள்ளது என்றும் அவர் சாடினார்.
ஹஜ் யாத்திரிகர்கள் கடந்த ஆண்டு நெரிசலில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்திலும் செளதி மீது ஈரான் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications