சவுதி எண்ணெய் கப்பல் துறைமுகத்தில்.. டிரோன் தாக்குதல்... மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
யாத்: ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிலுள்ள மிகப் பெரிய எண்ணெய் கப்பல் துறைமுகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் துறைமுகங்களில் ஒன்று சவுதியிலுள்ள ராஸ் தனுரா துறைமுகம். இந்த துறைமுகத்தில் இருந்துதான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கட்டா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த துறைமுகத்தின் மீது டிரோன் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிரிவு தலைவர் ஜெனரல் யஹ்யா சாரியா நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்குச் சவுதி அரசு உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில், எண்ணெய் துறைமுகத்தில் நடத்தப்பட்டுள்ளது உண்மைதான் என்று அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "துறைமுகம் மீது டிரோன் தாக்குதல் நடைபெற்றது. அதேபோல தஹ்ரானில் உள்ள சவுதி அரம்கோவின் குடியிருப்பு பகுதியிலும் ஏவுகணை விழுந்துள்ளது.

பாதிப்பு இல்லை
இருப்பினும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. அதேபோல பொதுச் சொத்துகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை" என்று கூறினார். எண்ணெய் துறைமுகத்தில் நடைபெற்ற தாக்குதலால் எதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே, கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் உள்நாட்டுப் போர்
சவுதியின் அண்டை நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹாதியை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சி படையினர் போராடி வருகின்றர். இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஈரான் எடுத்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்நாட்டிற்கு எதிராக ஏமன் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைச் சவுதி அரேபியா எடுத்தது.

இதுதான் காரணம்
இதன் காரணமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி படைகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்களும் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல ஹவுதி கிளர்ச்சியாளர்களை டிரம்ப் அரசு வெளிநாட்டுப் பயங்கரவாத குழுவாக அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பை பைடன் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications