சவுதி அரேபியா: வீட்டில் ஹீட்டர் வெடித்து கேரள தம்பதி குழந்தையுடன் கருகி மரணம்
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் வீட்டில் ஹீட்டர் வெடித்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த கேரள தம்பதியினர் குழந்தையுடன் கருகி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் சவுதி அரேபியாவில் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது சகோதரர்களும் அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார்கள். ரவியின் மனைவி சுதா (வயது 45). தனது 5 வயது- மகன் ஆரோமல் மற்றும் மாமனார் மாதவன் ஆகியோருடன் காயங்குளத்தில் வசித்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆரோமல் எல்.கே.ஜி. படித்து வந்தான். திருமணமாகி நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரோமல் பிறந்ததால் அவனை மிகவும் செல்லமாக அவர்கள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுதா தனது குழந்தையுடன் கணவரை பார்ப்பதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றார். வெள்ளியன்று சவுதிஅரேபியாவில் ரவி தங்கியிருந்த குடியிருப்பில் ரவியும் அவரது மனைவி சுதா, மகன் ஆரோமல் ஆகியோர் தீயில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அங்கு வசிக்கும் ரவியின் சகோதரர்கள் அங்கு சென்று அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, அந்த அறையில் இருந்த ஹீட்டர் கருவி வெடித்ததால் தீப்பிடித்து உடல் கருகி பலியானது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications