ஏற்கெனவே பஞ்சம்.. இதுல இது தேவையா? ஹஜ் பயணம்; சவுதி வார்னிங்கால் சிக்கலில் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்கெனவே பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்படி இருக்கையில், ஹஜ் பயண விஷயத்தில் சவுதி அரசு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எங்களது கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.
சவுதியின் எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுடன் பிரச்சனை, இப்போது சவுதியுடனும் பஞ்சாயத்து என பாகிஸ்தானுக்கு ஏழரை தொடங்கியிருக்கிறது.

ஹஜ் பயணம் மேற்கொள்வதை இஸ்லாமியர்கள் தங்கள் மத கடமையாக கருதுகின்றனர். ஆனால் இந்த புனித பயணத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதன் மூலம் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எனவே சவுதி அரசும், ஹஜ் பயண கமிட்டியும் கறாரான விதிமுறைகளை விதித்திருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இத்தனை பேர்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் அனுமதியை வழங்குவோம் எனவும் சவுதி அரசு கூறியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த 89,000 பேருக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை அந்நாட்டை சேர்ந்தவர்கள் அப்பட்டமாக மீறுவார்கள் என்று சவுதி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது டூரிஸ்ட் விசா அல்லது விசிட் விசா மூலம் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சவுதி வருகிறார்கள். அங்கிருந்து அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இது சட்டவிரோதம் என்று சவுதி கூறியுள்ளது.
இப்படி சட்டவிரோதமாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சுமார் ரூ. 4.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இவர்களுக்கு உதவுபவர்களுக்கு ரூ. 22.5 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சவுதி எச்சரித்துள்ளது. வெறும் அபராதம் மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம். அவர்கள் மீண்டும் சவுதிக்குள் நுழைய சுமார் 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் என்றும் சவுதி வார்னிங் கொடுத்திருக்கிறது.
பாகிஸ்தானிலிருந்து வரும் 89000 பேரில் 23,620 பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணத்தை மேற்கொள்கிறார்கள். சவுதியின் வார்னிங் பற்றி பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா அசிஃப் கூறுகையில், "இந்த பிரச்சினை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கிறது. எங்கள் நாட்டின் மதிப்பை இது குறைத்து காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானியர்கள் சட்ட விரோதமாக ஹஜ் பயணம் மேற்கொள்வது அந்நாட்டு அரசின் தோல்வியை காட்டுகிறது என்றும், பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தத் தவறினால், அது இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையையும், இருதரப்பு உறவுகளையும் பாதிக்கக்கூடும் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications