மாடு, கழுதை என்று திட்டிய கணவன்… வழக்கு போட்ட சவுதி மனைவி
ஜெட்டா: சவுதி அரேபியாவில் மாடு, கழுதை என்று பொது இடத்தில் திட்டிய கணவனை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் மனைவி.
இது குறித்து சவுதி கெசட்டில் கூறியிருப்பதாவது:
சவுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), கிரிமினல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் அடிக்கடி தன்னை மாடு, கழுதை என்று திட்டி அவமானப்படுத்துகிறார். அத்துடன் தகாத வார்த்தைகளில் அசிங்கமாக பேசுகிறார். பொது இடங்கள் என்று கூட பார்க்காமல், மாடு, கழுதை என்று திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து பெண்ணின் கணவரை ஆஜர்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கணவன்மார்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக சவுதி கோர்ட்டில் வழக்கு தொடர்வது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில் கணவன், மனைவிக்குள் சமரசம் ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.