தேனீக்கள் மூலம் ஒரு சில நொடிகளில் கொரோனா பாதிப்பை கண்டறியலாம்.. நெதர்லாந்து ஆய்வாளர்கள் அசத்தல்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக நாடுகள் கொரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட சதவிகித நோயாளிகள் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத asymptomatic கொரோனா நோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது பெரும் பணியாக உள்ளது.
கொரோனாவை கண்டறிய தற்போது பல சோதனை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது RT PCR சோதனை. ஆனால் இதில் முடிவுகள் தெரியவர சில மணி நேரங்கள் வரை ஆகும். அதற்குள் அந்த நபர் பலருக்கு கொரோனாவை பரப்பி விடுகிறார்.
இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொரோனாவை எளிதில் கண்டறிய புதியதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறிய முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஒரு சில நொடிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்துவிட முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகள் மூலம் கொரோனாவை கண்டறிய எடுக்கப்படும் முதல் முயற்சி இது இல்லை.
ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். நாய்கள் 94% வரை கொரோனாவை சரியாகக் கண்டறிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications