வாக்கரிசி போட வந்த வாக்னர் குழு.. எல்லாம் தெரிஞ்ச ரஷ்ய தளபதி.. புதினுக்கே ட்விஸ்ட்.. இப்ப என்னாச்சு
மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16 மாதங்கள் ஆகியும் இன்னமும் போரின் வீரியம் குறையவில்லை. இதில் ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருப்பது வாக்னர் எனப்படும் கூலிப்படைதான். வெளிநாடுகள் இந்த தாக்குதலை போர் என்று கூறினாலும், ரஷ்யாவை பொறுத்த அளவில் இது வெறும் ராணுவ நடவடிக்கைதான். எனவே ரஷ்ய ராணுவத்தின் முக்கிய புள்ளிகள் இதில் களம் இறங்காமல், வாக்னர் போன்ற கூலிப்படைகளை கொண்டே ரஷ்யா உக்ரைனை கைப்பற்றி வருகிறது.

இந்த போரில் ரஷ்யாவுக்காக வாக்னர் குழு சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொடுத்திருக்கிறது. தற்போதைய சூழலில் உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷ்யா வசம் இருக்க வாக்னர் குழுதான் காரணம். இதை அந்த குழுவே பெருமையாக கூறி வருகிறது. ஆனால் இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்நிலையில் தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது.
எனவே ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவும், அதிபர் புதினுக்கு எதிராகவும் போரை அறிவித்தது. இது ரஷ்யாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ரஷ்யாவில் தனியார் ராணுவம் எனப்படும் கூலிப்படைகளுக்கு சட்ட ரீதியாக எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் வாக்னர் குழுவின் கதையே வேறு. இவர்களின் முன்னாள் தலைவர்கள் புதினுடன் நெருக்கமாக இருந்தவர்கள். எனவே இந்த நட்பு காரணமாக வாக்னர் குழுவை புதின் கண்டும் காணாமல் இருந்தார்.
ஆனால், தான் ஊட்டி வளர்ந்த கூலிப்படை தனக்கு எதிராக திரும்பியதால் அதிர்ந்துபோன புதின், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்துபவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று கூறினார். இப்படியாக இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்த நிலையில், பெலாரஸ் அதிபர் வாக்னர் கூலிப்படையுடன் ரஷ்யா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் கலகத்தை கைவிடுவதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அறிவித்தார்.
இருப்பினும் இந்த விவகாரம் ரஷ்யா வரலாற்றில் ஓர் கருப்பு புள்ளியாக பார்க்கப்படுகிறது. உலகின் மிகவும் பலம் வாய்ந்த உளவு அமைப்பை வைத்திருக்கும் ரஷ்யாவால் எப்படி இந்த விஷயத்தை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது என்பது கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது. எனவே இந்த கிளர்ச்சி பின்னணியில் இருப்பவர்களை ரஷ்ய ராணுவம் அடையாளம் கண்டு வருகிறது. அந்த வகையில்தான் உக்ரைனின் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
செர்ஜி சுரோவிகின் ஓர் திறமையான ராணுவ அதிகாரி. வாக்னர் தலைவருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர், மாஸ்கோவிற்கும் வாக்னர் குழுவிற்கும் இடையே தொடர்புப் புள்ளியாக செயல்பட்டார். ஆனால் இந்த கிளர்ச்சி விவகாரம் குறித்து இவருக்கு முன்னரே தெரிந்திருந்தும் அது குறித்து அவர் எச்சரிக்கவில்லை. இதன் மூலம் அவர் வாக்னர் குழுவுக்கு ஆதரவளித்திருப்பது தெரிய வந்துள்ளதாக ரஷ்ய ராணுவம் சந்தேகிக்கிறது. இந்நிலையில் அவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் தற்போது காணாமல் போயுள்ளார்.












Click it and Unblock the Notifications