அமெரிக்க அதிபர் மீது மரியாதை இருக்கு.. ஆனால் டிரம்ப் சொல்வதை ஏற்க முடியாது.. விளாசிய சசிதரூர்
பிரேசிலியா: அமெரிக்க அதிபர் பதவி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனை மனதில் வைத்து தான் நாங்கள் பேசுவோம். ஆனால் சில நேரங்களில் எங்களின் புரிதல் சற்று வித்தியாசமானது'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார். ஆபரேஷன் நடவடிக்கை தொடர்பாக பிரேசில் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் அளித்த சசிதரூர் அடுத்ததாக அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் டிரம்பை சீண்டி உள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானை பந்தாடியது. ஏவுகணைகளை வீசி பயங்கரவாதிகளின் முகாம்கள், விமான தளம், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.

அடி தாங்க முடியாத பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. நாங்கள் உங்களை சீண்ட மாட்டோம். உடனடியாக தாக்குதலை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியது. நம் நாடும் பாவம் பார்த்து பாகிஸ்தானை அடிப்பதை நிறுத்தியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இதனை முறியடிக்கவும், ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துக்கூறவும் வெளிநாடுகளுக்கு 7 எம்பிக்கள் குழுக்கள் சென்றுள்ளன.
இதில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான குழுவினர் பனாமா, கயானா, கொலம்பியா பயணத்தை முடித்து பிரேசில் சென்றார். அங்கு சசிதரூர் எம்பி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியா - பாகிஸ்தான் மோதலை அமெரிக்கா தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சசிதரூர் எம்பி, ‛‛அமெரிக்க அதிபர் பதவி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அந்த மரியாதையை மனதில் வைத்து தான் நாங்கள் பேசுவோம். ஆனால் சில நேரங்களின் எங்கள் புரிதல் சற்று வித்தியாசமானது. மோதலை நிறுத்தும்படி எங்களிடம் யாரும் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே மோதலை நிறுத்த பாகிஸ்தானிடம் கூறியிருந்தோம். பாகிஸ்தான் மோதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம் என்று கூறியிருந்தோம்.
அமெரிக்க அதிபர் அல்லது அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் ஏதேனும் கூறியிருந்தால் அது பாகிஸ்தானின் வற்புறுத்தலாக இருந்திருக்கும். நாங்கள் போரை விரும்புவது இல்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம். அதுதான் எங்களின் அடிப்படை. . மே 7ம் தேதி ஆரம்பத்தில் இருந்தே மோதலை நீடிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். மேலும் இது போருக்கான தொடக்க தாக்குதல் அல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிரான பழிவாங்கல் மட்டுமே என்று தெரிவித்து இருந்தோம்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் எதிர்வினையாற்றாமல் இருந்தால் நாங்களும் எதிர்வினையாற்றி இருக்கமாட்டோம். வாஷிங்டனில் சுவாரசிய நிகழ்வு இருக்கிறது. நாம் அங்குசெல்லும் அதே நாளான நாளை தான் பாகிஸ்தான் குழுவும் அங்கு வருகிறது. மோதல் நடந்த இருநாடுகளின் பிரதிநிதிகள் ஒரே நாளில் அமெரிக்காவில் இருப்பதால் ஆர்வம் என்பது அதிகரிக்க உள்ளது'' என்றார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதனை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனாலும் கூட டிரம்ப் தொடர்ந்து போரை நிறுத்தியது அமெரிக்கா தான் என்று கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications