வங்கதேசத்திற்கு மீண்டும் திரும்புகிறார் ஷேக் ஹசீனா.. அதுவும் பிரதமராக திரும்புவார்! அவாமி லீக் தகவல்
டாக்கா: கடந்தாண்டு வரை வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா.. அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் அவர் பிரதமர் பதவியை இழந்து, இந்தியாவுக்குத் தப்பி வரும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்ப உள்ளதாகவும் அதுவும் பிரதமராக வங்கதேசத்திற்குத் திரும்பவுள்ளதாகவும் அவரது நெருங்கிய நண்பரும் அமெரிக்க அவாமி லீக்கின் துணைத் தலைவருமான ரப்பி ஆலம் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக மாறியது. ஒரு கட்டத்தில் அவர்கள் வங்கதேச பிரதமர் அலுவலகத்தையும் கூட முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் சொந்த நாட்டில் இருந்தே வெளியேறினார்.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் அப்போதே லண்டனுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அவருக்குப் பிரிட்டன் விசா கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கினார். இதற்கிடையே ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேச பிரதமர் பதவியை ஏற்பார் என்று அவரது நெருங்கிய நண்பரும் அமெரிக்க அவாமி லீக்கின் துணைத் தலைவருமான ரப்பி ஆலம் கூறியிருக்கிறார்.
முகமது யூனுஸ் திரும்ப போக வேண்டும்
மேலும், இப்போது வங்கதேசத்தில் நடந்து வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ் எங்கிருந்து வந்தாரோ, அங்கேயே திரும்பிச் செல்லலாம் என்றும் கூறியுள்ளார். வங்கதேசத்தில் தற்போதுள்ள சூழல் கவலை எழுப்பும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வங்கதேசம் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், சர்வதேச சமூகம் வங்கதேசத்திற்காக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பயங்கரவாத எழுச்சி
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "வங்கதேசம் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதை கவனிக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகத்திற்கு இருக்கிறது. எந்தவொரு நாட்டிலும் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதில் தவறு இல்லை. ஆனால், வங்கதேசத்தில் நடந்தது அரசியல் எழுச்சி இல்லை.. அது ஒரு பயங்கரவாத எழுச்சி.
கடந்த காலங்களிலும் கூட எங்கள் நாட்டின் பல தலைவர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களுக்குப் புகலிடம் கொடுத்த இந்தியாவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்திய மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
ஷேக் ஹசீனா மீண்டும் வருகிறார்
கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் சூழ்ச்சி நடந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். வங்கதேச ஆலோசகராக இப்போது டாக்டர் யூனுஸ் இருக்கிறார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரே இல்லை.. அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பச் செல்ல வேண்டும். ஷேக் ஹசீனா மீண்டும் வருகிறார். அவர் மீண்டும் பிரதமராக வருகிறார் என்று நான் வங்கதேச மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
வங்கதேசத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. நீங்கள் சில மோசமான விஷயங்களை செய்துவிட்டீர்கள்.. ஆனால் அது உங்கள் பிரச்சினை அல்ல.. சிலர் செய்த சூழ்ச்சியால் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications