குவைத் மீது படையெடுத்த சதாம் உசேன்... கலங்கி நின்ற இந்தியர்கள்... பாதுகாத்த ஷேக் சபா அல் அஹ்மத்..!
குவைத்: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமான நிலையில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாத்திருக்கிறார்.
வளைகுடா போரின் போது குவைத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் உயிருக்கு உத்தரவாதமின்றி தவித்த நிலையில் அவர்களுக்கான நேசக்கரம் நீட்டியவர் இவர்.
குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளுமே 90-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் வேலைக்காக குவைத் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் தவிப்பு
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர் 1963 முதல் 2003 வரை குவைத் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். வளைகுடா போரின் போது கடந்த 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி குவைத் மீது ஈராக்கின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் படையெடுத்து வந்தார். இதனால் குவைத்தில் நிலவிய போர் பதற்றத்தில் அப்பாவிகள் பலர் உடைமைகளை இழந்து நிற்கதியாய் நின்றனர். அவர்களில் அந்நாட்டிற்கு வேலைக்காக சென்ற இந்தியர்களும் அடங்குவர். அதில் குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளும் அதிகம்.

கூட்டுப்படை
அந்த தருணத்தில் ஒரு வெளியுறவுத்துறை அமைச்சராக மட்டுமின்றி ஆகச்சிறந்த ராஜதந்திரியாகவும் செயல்பட்டவர் ஷேக் சபா அல் அஹ்மத். தன்னால் இயன்றவரை குவைத்தில் இருந்த வெளிநாட்டினரை பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் சேர்த்தார். ஷேக் சபா அல் அஹ்மத் முன்னெடுத்த முயற்சியால் குவைத்தில் இருந்து அமெரிக்கக் கூட்டுப்படையினரால் ஈராக் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. அதற்கு காரணம் அமெரிக்காவுடன் ஷேக் சபா அல் அஹ்மத் பேணிய நட்பும் உறவும் தான்.

அரபு நாடுகள்
சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார், போன்ற அரபு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு மத்தியஸ்தராக விளங்கினார் ஷேக் சபா அல் அஹ்மத். அந்நாட்டினரும் ஷேக் சபா அல் அஹ்மத்தின் ஆலோசனை, அறிவுறையை கேட்டுக்கொள்வார்கள். காரணம் இவருக்கு உள்ள தலைமைத்துவத்துக்கான பண்பு தான். எண்ணெய் வளம் மிக்க குவைத் இன்று உலகின் முக்கிய சுற்றுலாதளங்கள் நிறைந்த நாடாக மாறியிருக்கிறது.

குவைத் வளர்ச்சி
குவைத்தைன் இன்றைய அபரிமிதமான இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் இவர் தான். இவர் குவைத்தின் நவீன சிற்பி என வர்ணிக்கப்படுகிறார். குவைத்தில் இவர்களது குடும்பம் தான் காலம் காலமாக நூற்றாண்டுகளை கடந்து ஆட்சி புரிந்து வருகிறது. குவைத் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வேலைக்காக அங்கு சென்றவர்கள் தான் உள்ளார்கள். குவைத்தை நம்பி வரும் தொழிலாளர்களுக்கு தேவையான முழு உதவிகளையும் சபாவின் அரசு செய்து கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications