சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மிதக்கும் நிலைக்கு மீட்பு! குட் நியூஸ்தான்.. ஆனா இன்னும் நகரவில்லையே
கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீட்கப்பட்டு தற்போது மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி உலக நாடுகள் அத்தனையும் நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. ஆனால் கப்பல் இன்னும் அந்த பகுதியை கடக்கவில்லை
எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச சரக்கு வணிக பரிமாற்றத்தில் சுமார் 12% பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த அளவுக்கு அதிகப்படியான சரக்கு கப்பல்கள் இந்த வழியாக பயணிக்கின்றன.
இதனால்தான் சீனாவில் இருந்து நெதர்லாந்து சென்ற பிரமாண்ட சரக்கு கப்பல் "எவர் கிவன்" கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிக் கொண்டது. மணல் புயல் வீசியதன்காரணமாக மாலுமி வழிதெரியாமல் தடுமாறியதால், சகதியில் சரக்கு கப்பல் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டது.
மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன?
மீட்பு குழு
இதையடுத்து கப்பலில் இருந்து பாரம் குறைக்கும் பணிகள் நடைபெற்றன. இழுவை படகுகள் மூலமாக மீட்புக்குழுவினர் இந்த கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சில வாரங்கள் வரை இந்த பணி நீடிக்கக் கூடும் என்று முதலில் தகவல் வெளியாகியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் உட்பட பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
சூயஸ் கால்வாய்
சூயஸ் கால்வாயில் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டதாக வர்ணிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது . இந்த நிலையில்தான் இன்று கப்பல் மிதக்கும் நிலைக்கு மீட்கப்பட்டு விட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கச்சா எண்ணை விலை குறைந்தது
400 மீட்டர் நீளமுள்ள எவர் கிவன் உள்ளூர் நேரப்படி (02.30 ஜிஎம்டி) அதிகாலை 4.30 மணிக்கு வெற்றிகரமாக மிதக்கவைக்கப்பட்டது. கப்பல் பாதுகாப்பாக உள்ளது என்று உலகளாவிய கடல்சார் சேவை நிறுவனம் இஞ்ச்கேப் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கப்பல் மீண்டும் மிதந்ததாக வெளியான செய்திக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.ப்ரெண்ட் கச்சா எண்ணை பீப்பாய்க்கு 1 டாலர் குறைந்து 63.67 டாலராக இருந்தது.
எப்போது நகரும்
அதேநேரம், கப்பல் இன்னும் தன்னிச்சையாக இயங்கவில்லை. அதை இயங்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. எப்போது டிராபிக் ஜாம் சரியாகும், எப்போது கப்பல் அங்கேயிருந்து நகரும் என்பது இன்னும் தெரியவில்லை. இன்று காலையே கப்பல் மிதக்க ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தபோதிலும், மாலை வரை கப்பல் அங்கேயேதான் நின்று கொண்டு இருக்கிறது. அதை நகர்த்த தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன.