காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தைத் தேடும் சிங்கப்பூர் விமானப்படை, கடற்படை!
சிங்கப்பூர்: இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகளுடன் சிங்கப்பூர் கிளம்பி நடு வழியில் காணாமல் போய் விட்ட ஏர் ஏசியா விமானத்தைத் தேடும் பணியில் தனது விமானப்படை மற்றும் கடற்படையை சிங்கப்பூர் அரசு களம் இறக்கியுள்ளது.
ஏர் ஏசியாவிற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. 155 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் சிங்கப்பூர் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், வழக்கமான பாதையிலிருந்து விமானம் விலகிச் சென்றுள்ளதாகவும், அதன் தகவல் தொடர்பு காலை 6.30 மணி முதல் துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமான விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது தேடுதல் பணியில் சிங்கப்பூர் விமானப்படை விமானங்களும், கடற்படையும் தீவிரமாக இறங்கியுள்ளன. இதுகுறித்து சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துக் கழக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி130 ரக விமானங்கள் இரண்டு இந்தத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அனைத்து வகையான மீட்புப் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தின் 2வது முனையத்தில் விமான பயணிகளின் உறவினர்களின் வசதிக்காக ஒரு கவுண்டரும் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தாண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்தது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications