மலேசிய விமானம் பற்றி பொறுப்பில்லாமல் பேசியதற்காக மன்னிப்பு கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர்: மலேசிய விமானம் எம்.ஹெச். 17 குறித்து சமூக வலைதளத்தில் பொறுப்பில்லாமல் கருத்து வெளியிட்டதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் நடந்த பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் உக்ரைன் வான்வெளி வழியாக செல்லவில்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை பார்த்த பலரும் இப்படி பொறுப்பில்லாமலா அறிவிப்பது என்று ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வெள்ளிக்கிழமை காலை நாங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போஸ்ட் செய்தது பொறுப்பில்லாமல் இருப்பதாக சிலருக்கு தோன்றியுள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. அந்த தகவலை நாங்கள் வேறு நல்லவிதமாக தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தகவல் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நிறுவன விமானங்களில் பயணம் செய்யவிருக்கும் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொண்டு வழித்தடம் பற்றி கேட்டதால் தான் அப்படி அறிவித்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.