சிங்கப்பூர் கலவரம்: சிறையில் உள்ள 52 இந்தியர்களை நாடுகடத்த உத்தரவு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டு அங்கிருந்த 52 இந்தியர்கள் நாடுகடத்தப்பட உள்ளனர். இவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி, சிங்கப்பூரில் நடந்த வாகன விபத்தில் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். தமிழக வாலிபர் மரணத்தை படுகொலை எனக் கூறி அங்கு பெரிய அளவில் கலவரம் மூண்டது.
அக்கலவரத்தில் சுமார் 40 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். கலவரத்திற்குக் காரணம் மதுவே எனக் கண்டறிந்த போலீசார், அதனைத் தொடர்ந்து இந்தியர்கள் வாழும் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்தனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் கொள்கை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்தது.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 52 பேர் இந்தியர்கள் ஆவர். ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். விரைவில் அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
28 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் விசாரணை நடத்தப்படும் 200 இந்தியர்கள், எச்சரிக்கை விடப்பட்டு சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications