அமெரிக்க மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது "சுள்ளான்"!
நியூயார்க்: அமெரிக்காவின் வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அம்மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறான்.
பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவன் எதான் சோனே பார்ன். கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவன். வெர்மோண்ட்டில் கவர்னர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் எந்த சிறுவன் போட்டியிட போகிறான் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இச்சிறுவன் நடக்கவிருக்கும் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறான். இதை அறிந்த வெர்மோண்ட் மாகாண மக்கள் இதை பெரிய விஷயமாக கருதவில்லை என்பதே உண்மை. சில காலங்களுக்கு முன்பு அந்த நாட்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டன.
அதன்படி அங்கு எந்த வயதினரும் போட்டியிட முடியும். வயது வரம்பு ஒரு தடையில்லை. வெர்மோண்ட் மாகாணத்தில் 4 ஆண்டுகள் குடியிருந்தால் மட்டும் போதும். தேர்தலில் போட்டியிடும் எதான் தற்போது தேர்தலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இணையதளம் மூலம் மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது .
சுகாதாரம் ,பொருளாதாரம், கல்வி என பல்வேறு துறைகளை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருவதாக உறுதியளித்து வருகிறான்.
இந்த தேர்தலில் மூத்த கடற்படை வீரர் ஜேம்ஸ் ஹெலர்ஸ் மற்றும் பிரன்டா சீகல் ஆகியோர் போட்டியிடுகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல், இந்த சிறுவனை எதிர்த்து கிறிஸ்டினே ஹாஸ்குவஸ் என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.