சார்! நான் கழுதை வண்டியில வாரேன்! பெட்ரோல் விலை உயர்வால் அனுமதிகோரும் பாகிஸ்தான் விமான ஊழியர்
இஸ்லாமாபாத்: ‛‛நாட்டில் நிலவும் பணவீக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் கழுதை வண்டியில் விமானம் நிலையத்துக்கு வேலைக்கு வர அனுமதி வழங்க வேண்டும்'' என பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு ஊழியர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரமராக இருந்தார். அவருக்கு ஆதரவு வழங்கிய எம்பிக்கள் பின்வாங்கினர். இதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார்.
அதன்பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியை கைப்பற்றின. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை இருந்தது. இதற்கிடையே ஏற்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மையால் பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமாக துவங்கி உள்ளது.

விலைகள் அதிகரிப்பு
இதனால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு அதிக செலவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.30 அதிகரித்தது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகும் தொடர்ச்சியாக எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?
இதனால் பெட்ரோல், டீசல் விலை எகிறி 200யை கடந்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.209.86 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.204.15 ஆகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள், இம்ரான்கான் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆளும்தரப்பு கண்டுக்கொள்ளவில்லை. முந்தைய இம்ரான்கானின் தவறான பொருளாதார கொள்கை, ஆட்சி முறையில் தான் விலை அதிகரிக்கிறது என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

கடிதம் எழுதிய ஊழியர்
இந்நிலையில் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ராஜா ஆசிப் இக்பால் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது விமான போக்குவரத்து ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கழுதை வண்டியில்...
அதில், ‛‛ பணவீக்கம் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர குடும்பங்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனக்கும் அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனால் நான் பணிக்கு வருவதற்கு கழுதையை பயன்படுத்த விரும்புகிறேன். எனது கழுதை வண்டியை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

ஊடகத்துக்காக மட்டுமே...
இதுபற்றி அந்த ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சாய்புல்லா கான் கூறுகையில், ‛‛ஊழியர்களுக்கு எரிபொருளுக்கான அலோவன்ஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கான மெட்ரோ உள்ளிட்ட பிற போக்குவரத்து வசதியும் உள்ளது. தற்போதைய கடிதம் என்பது ஊடக செய்தியில் வர வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது'' என்றார். இதன்மூலம் கழுதை வண்டி விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாது என்பதை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications