"அமைதியாக இருக்க மாட்டோம்.." இஸ்ரேலுக்கு எதிராக பரபர அறிவிப்பு.. உலக அரசியல் மாறுதே.. ஏன் இப்படி
பொகோடா: காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. அங்கு ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பல மாதங்களாகத் தொடர்கிறது. இத்தனை காலம் வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், இப்போது தெற்கு காசா பக்கம் தனது கவனத்தைத் திரும்பியுள்ளது.

அது மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் உலக நாடுகள் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. மேலும், இந்த காசா போருக்கு உலகெங்கிலும் கூட எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எதிர்ப்புகள்: பல நாடுகளும் இஸ்ரேல் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிலும் கூட இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் நாட்டு உடனான அனைத்து விதமான தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாகத் தென் அமெரிக்கா நாடான கொலம்பியா அறிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். கொலம்பிய அதிபர் பெட்ரோ, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் பேசுவது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே கடந்த காலங்களிலும் இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொலம்பியா: மேலும், இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதில் இணையுமாறும் உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இங்கே மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். கொலம்பிய அரசு இஸ்ரேல் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக் கொள்கிறோம். இனப்படுகொலை செய்யும் ஒரு அரசையும் இனப்படுகொலை ஆதரிக்கும் ஒரு பிரதமரையும் கொண்டு இருப்பதற்காக இஸ்ரேல் மீது இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்" என்றார்.
அமைதியா இருக்க முடியாது: காசாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து உலக நாடுகள் அமைதியாக இருக்க முடியாது என்றும் அவர் சாடினார். இதற்கிடையே கொலம்பிய அதிபர் பெட்ரோவுக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் கொலம்பியாவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் யூதர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டு இருப்பதாகவும் வெறுப்பைப் பரப்பி வருவதாகவும் சாடினார். மேலும், பெட்ரோவின் இந்த நடவடிக்கை ஹமாஸ் ஆயுதக் குழுவைப் பாராட்டி சான்று அளிப்பது போல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்தாண்டு அக். மாதம் முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தின. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்தன. இந்தத் தாக்குதலுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடந்தாண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே பொலிவியா கடந்த அக். இறுதியில் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது.
உலக நாடுகள்: கொலம்பியா, சிலி மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் தூதர்களைத் திரும்ப அழைத்தன. இந்தச் சூழலில் தான் இப்போது கொலம்பியாவும் அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications