போர்க்கப்பல், மிதக்கும் வேலிகள்.. சைலண்ட்டாக தென் சீன கடலில் சீனா போடும் பயங்கரமான திட்டம்! பரபரப்பு
பெய்ஜிங்: வளைகுடா மோதல் காரணமாக ஏற்கனவே ஹாரமுஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மறுபுறம் சீனாவும் தென் சீனக் கடலை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒரு பக்கம் இப்போது வளைகுடா நாடுகளில் சிக்கல் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் ஹார்முஸ் முடக்கப்பட்டுள்ள நிலையில், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு வரும் கப்பல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வர்த்தகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முடக்கும் சீனா
இந்த நேரத்தில் சீனாவும் தென் சீனக் கடலை முடக்கப் பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் சீனக் கடலில் இருக்கும் 'ஸ்கார்பாரோ ஷோல்' பகுதி இப்போது ஒரு சர்வதேச போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் நுழைவு வாயிலைச் சீனா தனது கப்பல்கள் மற்றும் புதிய மிதக்கும் வேலிகள் மூலம் முற்றுகையிட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2026ன் புதிய செயற்கைக்கோள் போட்டோக்களும் அதை உறுதி செய்கின்றன. இதனால் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்திருக்கும் இந்தப் பகுதியை, சீனா தனது ஹுவாங்யான் தீவு என உரிமை கொண்டாடுகிறது. ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களில், சுமார் 352 மீட்டர் நீளத்திற்கு ஒரு மிதக்கும் வேலியைச் சீனா அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அங்குச் சீனாவின் கடலோர காவல்படை மற்றும் சுமார் 10க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, இந்தப் பகுதியைச் சீனா ஒரு 'தேசிய இயற்கை பூங்கா' என அறிவித்துள்ளது. இது ஆக்கிரமிப்புக்கான ஒரு தந்திரமான சட்டப்பூர்வ நடவடிக்கை என பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதனால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனா இதுபோல பிரஷர் போடுவதால் பிலிப்பைன்ஸ் அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டி வருகிறது.
அமெரிக்கா உடன் நெருக்கம்
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அமெரிக்காவுடன் தனது உறவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பலப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் 20 முதல் மே 8 வரை 'பாலிகாட்டன்' (Balikatan 2026)** என்ற பெயரில் பிரம்மாண்டமான போர்ப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுமார் 17,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாகச் சர்ச்சைக்குரிய ஸ்கார்பாரோ ஷோலில் இருந்து வெறும் 120 கடல் மைல் தொலைவில் உள்ள 'சாம்பல்ஸ்' பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. இது சீனாவை மேலும் ஆத்திரப்படுத்தவே செய்யும்!
ஈரான் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனைகளில் அமெரிக்கா மும்முரமாக இருப்பதைப் பயன்படுத்தி, சீனா இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். கடந்த 2016ல் சர்வதேச நீதிமன்றம் சீனாவின் இந்தத் தடையைச் சட்டவிரோதம் என அறிவித்திருந்தாலும், சீனா அதனைத் தொடர்ந்து மீறி வருகிறது. 2012ம் ஆண்டு முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில், பிலிப்பைன்ஸ் தனது கடற்படை ரோந்து பணிகளைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
மோதல்
தென் சீனக் கடலில் சீனா விரிக்கும் இந்த 'மிதக்கும் வலை' வெறும் மீன்பிடிப் பிரச்சனை மட்டுமல்ல.. அது ஆசியக் கடல் பகுதியில் தனது அதிகாரத்தை நிலைநாட்டும் ஒரு அரசியல் நகர்வு. இதில் பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா துணை நிற்பது சீனாவை எரிச்சலடையச் செய்துள்ளது. ஒரு சிறிய மீன்பிடித் தளம் உலக நாடுகளுக்கிடையேயான பெரும் மோதலுக்குத் தொடக்கமாக அமையுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications