கைதாகும் தென்கொரிய அதிபர்? போலீஸ் vs சீக்ரெட் சர்வீஸ்.. திடீரென ஏற்பட்ட பெரும் குழப்பம்! என்னாச்சு
சியோல்: தென்கொரியாவில் கடந்த மாதம் திடீரென எமர்ஜென்சியை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் அதிபர் யூன் சுக் யோல். அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிமினல் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரை கைது செய்ய அந்நாட்டு போலீசார் உட்பட பல முக்கிய அதிகாரிகள் அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவுகிறது.
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தென்கொரியாவில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் நிலவுகிறது. அந்நாட்டின் அதிபராக யூன் சுக் கடந்த மாதம் எமர்ஜென்சி அறிவித்து இருந்தார்.

அது சில மணி நேரம் மட்டுமே அமலில் இருந்தாலும் கூட அதன் பிறகு, அங்கு அடுத்தடுத்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையே யூன் சுக் கைதாகும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கைது செய்யக் குவிந்த அதிகாரிகள்:
பதவிநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தென்கொரிய அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்றனர். இருப்பினும், இல்லத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். என்ன நடந்தாலும் போலீசாரை கைது செய்ய விட மாட்டோம் என்று அங்குத் திரண்டுள்ள மக்கள் கூறியுள்ளனர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென் கொரிய அதிபராக இருந்த யூன் சுக் கடந்த டிச. 3ம் தேதி இரவு திடீரென எமர்ஜென்சியை கொண்டு வருவதாக அறிவித்தார். இருப்பினும், இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து சில மணி நேரங்களில் எமர்ஜென்சி சட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதேநேரம் யூன் சுக் யோல் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக கிரிமினல் விசாரணையும் தொடங்கப்பட்டது.
போலீசார்:
அதன் ஒரு பகுதியாகவே இப்போது அந்நாட்டு போலீசார் மற்றும் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய கூட்டு புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் யூன் சுக்கை கைது செய்ய அவரது இல்லத்திற்கு வந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் அதிகாரிகள் அங்குச் சென்றுள்ளனர். அங்கு யூன் சுக் ஆதரவாளர்கள் திரண்டுள்ள நிலையில், அவர்களைச் சமாளிக்க சுமார் 3,000 போலீசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சீக்ரெட் சர்வீஸ்:
இது ஒரு பக்கம் இருக்க சீக்ரெட் சர்வீஸ் யூன் சுக்கை கைது செய்ய அனுமதிக்குமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. அதாவது இப்போது யூன் சுக்கிற்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பை அளித்து வருகிறது. ஏற்கனவே ஒரு முறை தேடுதல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் கூட யூனின் அலுவலகம் மற்றும் இல்லத்தில் சோதனை நடத்த அதிகாரிகளை சீக்ரெட் சர்வீஸ் அனுமதிக்கவில்லை. இப்போது அவரை கைது செய்ய அதிகாரிகள் வந்துள்ள நிலையில், அவர்களை சீக்ரெட் சர்வீஸ் அனுமதிக்குமா இல்லையா என்பதிலும் குழப்பமே நிலவி வருகிறது.
எமர்ஜென்சி
தென் கொரியாவைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறையே அமலில் இருக்கிறது. இதனால் அங்கு யூன் சுக் யோல் அதிபராக இருந்த சமயத்திலும் எதிர்க்கட்சியினரே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று இருந்தனர். 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் அந்நாட்டு நாடாளுமன்றம் தொடங்கி முடங்கி வந்தது. அதன் காரணமாகவே அதிபர் யூன் சுக் திடீரென எமர்ஜென்சியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications