கலப்பட மருந்தால் பகீர்.. உடல் முழுவதும் ரோமம்.. 17 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு
மேட்ரிட்: ஸ்பெயினில் கலப்பட மருந்து காரணமாக வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் முடி வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் மலாகா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் மருந்துக் கலப்பட சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த நிறுவனம் ஜீரண குறைப்பாட்டை சரி செய்யும் ஒமர்ப்ரஸோல் (omeprazole) என்ற மாத்திரையில், மைனாக்ஸிடில் [minoxidil] என்ற வழுக்கை, முடி வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்யும் மூலக்கூறை கலந்துவிட்டதாக அங்கு நடந்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மருந்து அனைத்து மருந்தகங்களுக்கும் விற்பனைக்கு வந்தது.
அஜீரண குறைப்பாட்டை சரி செய்வதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பலருக்கும் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் நோய் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் கான்டபரியா, ஆண்டலூசியா உள்ளிட்ட நகரங்களில் 13 குழந்தைகளுக்கு இந்த நோயால் உடலில், அபரிமிதமான முடி வளர்ச்சி ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு புகார் அளித்தனர். இதன் அடைப்படையில் நடத்திய விசாரணையில் தான் மருந்து கலப்பட விவகாரம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து மருந்துகளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம், ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் உள்ளிட்டவைகளை ஸ்பெயின் அரசு ரத்து செய்துள்ளது.
முதல் பேட்ஜில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில், மேலும் 4 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 பேர் இந்த நோயால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரும் ஒமர்ப்ரஸோல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என ஸ்பெயின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications