ஸ்பெயின்: நோயாளியை தொட்ட கிளவுஸால் முகத்தை தொட்ட நர்ஸை தாக்கிய எபோலா வைரஸ்
மாட்ரிட்: ஸ்பெயினில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த கையுறையை முகத்தில் வைத்த நர்ஸுக்கு எபோலா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியர்ரா லியோனில் சேவை செய்த ஸ்பெயினைச் சேர்ந்த சமூக வேகர் மானுவல் கார்சியா வீஜோவை எபோலா வைரஸ் தாக்கியது. இதையடுத்து அவர் விமானம் மூலம் ஸ்பெயின் கொண்டு வரப்பட்டு மாட்ரிட்டில் உள்ள லா பாஸ் கார்லோஸ் III மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் கடந்த 25ம் தேதி உயிர் இழந்தார். அவர் இருந்த அறைக்கு இரண்டு முறை சென்ற நர்ஸ் தெரசா ரொமீரோவுக்கு எபோலா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தெரசா கார்சியாவை சுத்தம் செய்ய ஒரு முறையும், அவர் இறந்த பிறகு அவரது உடலை சுத்தம் செய்ய மறு முறையும் அந்த அறைக்கு சென்றுள்ளார்.
கார்சியாவை சுத்தம் செய்த கையுறையை அவர் தனது முகத்தில் வைத்துள்ளார். அந்த கையுறை மூலம் தான் அவருக்கு எபோலா தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் ராமிரஸ் தெரிவித்துள்ளார். லா பாஸ் மருத்துவமனையில் தெரசா உள்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக எபோலா வைரஸ் தாக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நர்ஸ் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு வைரஸின் தாக்கம் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications