ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டு ஒப்பந்தம்! பயணம் சக்ஸஸ்! ஸ்டாலின் ஹேப்பி பதிவு!
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எடிபன் நிறுவனமானது தொழில்நுட்ப கல்வி பயிற்சிக்குறிய சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனமாகும். குறிப்பாக இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிரியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்குரிய ஆய்வக சாதனங்கள் மற்றும் ஆற்றல் சார்ந்த உபகரணங்கள் உற்பத்தி செய்து வருகிறது. ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் வரும் காலத்தில் 500 பேர் முதல் 1000 பேர் வரை வேலைவாய்ப்பு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெயின் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்வதாக பதிவுகளை வெளியிட்டார்.
இந்நிலையில் நாளை அவர் சென்னை திரும்பவுள்ள சூழலில் இன்று நடைபெற்ற முக்கியச் சந்திப்பு மற்றும் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது;
''ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. ''

''நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும். ''
''இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன். '' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாளைய தினம் சென்னை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் பற்றி முதல்வர் விவரமாக விளக்கம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications