"சர்வநாசம்" வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்திய பூகம்பம்! கதறும் தாய்லாந்து! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு
மியான்மர்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மர் பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் வரை உணரப்பட்டுள்ளது. பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் சூழலில் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வசதியாக பாங்காக்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு தான் மியான்மர். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 5.41 கோடி தான். அங்குக் கடந்த சில காலமாகவே அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், ராணுவ ஆட்சியே அமலில் இருக்கிறது. அங்குள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் ஜெயிலிலும் வீட்டுச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து பூகம்பங்கள்
இதுபோன்ற அரசியல் குழப்பங்களால் தவித்து வரும் மியான்மரில் இன்று மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சுமார் முற்பகல் 11.50 மணியளவில் முதல் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. முதலாவது பூகம்பம் 7.7 ரிக்டரில் பதிவானது. இதனால் பொதுமக்கள் அஞ்சி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சற்று நேரத்திலேயே அங்கு 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மரில் உள்நாட்டுப் போரால் பேரழிவிற்கு உள்ளான சாகிங் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் தான் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பகுதிக்குச் செல்ல முறையான சாலை வசதிகள் கூட இல்லை. இதனால் அங்குப் பயணம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் அங்குப் பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மிகக் கடுமையாகப் பாதிப்பு
மேலும், இந்த பூகம்பம் மியான்மாரை மட்டுமின்றி அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
எமர்ஜென்சி நிலை அறிவிப்பு
இதற்கிடையே மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்யும் வகையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் பொதுவாகவே வானுயர்ந்த கட்டிடங்கள் பல இருக்கும். அதில் பல கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அங்கு எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Devastation across the city of Mandalay in Myanmar, as a result of today’s 7.7 magnitude earthquake, with dozens of buildings having collapsed as well as the Ava Bridge over the Irrawaddy River. pic.twitter.com/8YE8KsxXws
— OSINTdefender (@sentdefender) March 28, 2025
தாய்லாந்து மட்டுமின்றி நிலநடுக்கம் தாக்கிய மியான்மரிலும் எமர்ஜென்சி நிலையை அறிவிப்பதாக அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், சர்வதேச சமூகம் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரழிவு
மேலும், இந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்து நாட்டின் பங்குச் சந்தை மூடப்பட்டுள்ளது. டிரேடிங் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மட்டுமின்றி நாட்டின் பரவலான பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Whole Bangkok shook like Crazy! #Bangkok #earthquake pic.twitter.com/99v7ySZDGc
— Srushti Gopani (@DrSrushtiG) March 28, 2025
அங்கு அரசு அலுவலகங்களுக்காகக் கட்டப்பட்டு வந்த 30 மாடிக் கட்டிடம் நிலநடுக்கத்தால் ஒரே நொடியில் தரைமட்டமானது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகளையும் அந்நாட்டு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications