டென்ஷனான புதின்.. ஹவுதியை எப்படி தொடலாம்? உடனே நிறுத்துங்க.. அமெரிக்காவுக்கு பறந்த போன்.. பின்னணி
ஸனா: ஈரான் ஆதரவுடன் ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினர் மீது இன்று அமெரிக்கா நேரடி தாக்குதலை தொடுத்தது. போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காததால் ஹவுதிகள் கதிகலங்கிவிட்டனர். இப்படியான சூழலில் தான் இந்த தாக்குதல் சம்பவத்தால் அமெரிக்கா மீது ரஷ்யா கடும் கோபமடைந்துள்ளது. இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இந்த தாக்குதலை ரஷ்யா உக்கிரமாக எதிர்ப்பது ஏன்? அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில ஆண்டுகளாக பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் தான். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் இடையே இருந்த நீண்ட கால மோதல் என்பது போராக மாறியது. காசாவில் நுழைந்து இஸ்ரேல் கொடூர தாக்குதலை 15 மாதம் நடத்தியது. தற்போது அந்த போர் என்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போருக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி தங்களின் ஆதரவு அமைப்பான லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லா, ஏமனில் செயல்படும் ஹவுதிகள் மூலம் ஈரான், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது. இந்த 2 அமைப்புகளின் தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்த நிலையில் ஈரான் நேரடியாக இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த ஆண்டு ஈரானுக்குள் நுழைந்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இப்படி மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகிறது. தற்போது இஸ்ரேல் - காசா போரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி உள்ளார். இதனால் அந்த பிராந்தியத்தில் படிப்படியாக அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று இன்று அமெரிக்கா நேரடியாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகள் மீது கொடூர தாக்குதலை தொடங்கியது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஹவுதிக்கள் மீது நடைபெறும் முதல் தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதலில் அமெரிக்கா போர் விமானங்கள் மற்றும் போர் கப்பலை பயன்படுத்தியது. அதாவது செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹாரி எஸ் ட்ரூமன் விமானம்தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இந்த விமான தாங்கி போர்க்கப்பலில் இருந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்ற அமெரிக்க போர் விமானங்கள் ஹவுதிகளின் படை தளங்களை குறிவைத்து தாக்கியது. ஏமன் தலைநகர் ஸனா மற்றும் வடக்கு சாடா பிராந்தியத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படை தளங்களின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 31 ஹவுதிகள் இறந்தனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஹவுதி படை தளங்களில் இருந்த ரேடார், தளவாடங்கள் கருகிப்போகின.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல் தான். அதாவது காசா மீதான போர் நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹவுதிகள் செங்கடல் பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தான் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் ஏமனில் உள்ள ஹவுதிகளின் படை தளங்கள் மீது அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛செங்கடலில் அமெரிக்க கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கும். ஹவுதிகளின் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. உங்களின் தாக்குதலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தை பார்ப்பீர்கள். ஹவுதி படைக்கு ஈரான் அளித்து வரும் ஆதரவையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இனியும் அமெரிக்கா கப்பல், அதிபரை மிரட்ட வேண்டும். மீறினால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். ஏனென்றால் அமெரிக்கா ஒருபோதும் உங்களை சும்மா விடாது'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் ஹவுதிகளின் மீதான தாக்குதலால் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கடும் கோபமாகி உள்ளார். அமெரிக்காவிடம் பேசி உடனடியாக தாக்குதலை நிறுத்த அவர் கூறினார். இதையடுத்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ராவ், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஹவுதிகளின் மீதான இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். அதனை கேட்ட மார்கோ ரூபியோ, ஹவுதிகள் மீது அமெரிக்கா தாக்கியது ஏன்? என்பது பற்றி விளக்கினார். அதாவது செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் கடல் வழி வர்த்தகத்துக்கு ஹவுதிகள் இடையூறு செய்கின்றன. பல முறை வார்னிங் கொடுத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து தாக்குகின்றன. இதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.
இதை கேட்ட ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ராவ், ‛‛பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். ஏமனின் ஹவுதிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள். ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். உடனடியாக தாக்குதலை நிறுத்துங்கள். இது செங்கடல் பகுதியில் அதிக பதற்றத்தை தான் ஏற்படுத்தும்'' என்று வலியுறுத்தினார். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஏனென்றால் சம்பந்தமே இல்லாமல் இந்த விவகாரத்தில் ரஷ்யா வருகிறதே என்று உங்களுக்கு கேள்வி எழலாம்.
அதற்கு விடை என்னவென்றால் ரஷ்யா - ஏமன் ஹவுதிகள் இடையே நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இருநாடுகள் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. மேலும் ஏமன் சிக்கலில் சிக்கும்போது ரஷ்யாவும், ரஷ்யா பிரச்சனையை எதிர்கொள்ளும்போது ஏமனும் கூட உதவி செய்து வருகிறது. சமீபத்தில் கூட உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் பிற நாட்டு வீரர்கள் ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்தது. அப்போது ஏமனின் ஹவுதிகள் ரஷ்யாவுக்கு உதவி செய்ய தயார் என்று அறிவித்து இருந்தனர். அதுமட்டுமின்றி ஏமனின் ஹவுதிகள் என்பது ஈரானின் ஆதரவில் செயல்படும் அமைப்பாகும். ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சூப்பரான் பிரண்ட்ஷிப் உள்ளது. இப்படியான காரணங்களால் தான் ஹவுதிகள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் பேசி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications