லாகூரில் சிறுவர் பூங்காவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான 72 பேரில் 29 பேர் குழந்தைகள்
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 29 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள குல்ஷன் இ இக்பால் சிறுவர் பூங்காவின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்களுக்கு அருகே நடந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 29 பேர் குழந்தைகள் ஆவர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அந்த பூங்காவிற்கு பெரும்பாலும் லாகூரில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் வருவது வழக்கம். நேற்று ஈஸ்டர் என்பதால் பூங்காவில் கிறிஸ்தவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த தாக்குதலை கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தியதாகக் கூறி இதற்கு தாலிபான் அமைப்பின் அங்கமான ஜமாத்துல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்தபோது பூங்கா முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூங்காவிற்கு நடைபயிற்சிக்காக சென்ற ஹஸன் இம்ரான்(30) கூறுகையில்,
குண்டு வெடித்ததும் பூங்காவில் உள்ள மரங்களுக்கு மேல் ஜுவாலை வந்தது. மக்களின் உடல்கள் காற்றில் பறந்து சிதறியதை பார்க்க கொடூரமாக இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications