காபூல் விமானம் நிலையம் அருகே தலிபான்கள் பயங்கர தற்கொலைப்படை தாக்குதல்- ஒருவர் பலி; 13 பேர் படுகாயம்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இன்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காபூல் விமான நிலையம் அருகே தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 11-ந் தேதியன்று ஸ்பெயின் தூதரகத்தின் விருந்தினர் மாளிகை மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் பக்ராம் விமான தளம் அருகே தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கா படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை வெடிகுண்டுகள் நிரம்பிய காரை ஓட்டி வந்த தீவிரவாதி விமானம் நிலையம் அருகே வெடித்து சிதற வைத்தான். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் பாதுகாப்பு வாகனங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நஜீப் டேனிஸ் தெரிவித்துள்ளார்.