தற்கொலை எண்ணம் ஏற்படுவதை ரத்த சோதனையில் கண்டுபிடிக்கலாம்: ஆய்வில் மகிழ்ச்சி தகவல்
வாஷிங்டன்: தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் ஒருவர் உள்ளாரா என்பதை ரத்த பரிசோதனை மூலமாகவே கண்டறிய முடியும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதன்மூலம், ரத்த பரிசோதனையால், தற்கொலைகளை தடுக்க முடியும் என்று அந்த ஆய்வு உறுதியளிக்கிறது.
இந்தியாவில் தற்கொலை அதிகரிப்பு
மன உளைச்சல், பொருளாதார பிரச்சினைகள் போன்ற பல காரணங்களால் நாட்டில் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யோகா, மனவள பயிற்சிகளை கண்டுபிடித்து ஆரோக்கியமாக மனிதர்களை வாழச் செய்த நமது நாட்டில்தான், தற்போது தற்கொலைகளும் மிக அதிக அளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மூளை தூண்டுதல்
இந்நிலையில் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தற்கொலைகளுக்கான காரணங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் மூளையின் கட்டளைக்கு ஏற்ப தற்கொலை எண்ணம் உருவாகுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் வேதி மாற்றம்
மூளையில் அதுபோன்ற எண்ணம் ஏற்படும்போது, ரத்தத்தின் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதையும் இந்த ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. ரத்தத்தில் வேதியியல் மாற்றம் உருவாகியுள்ளதை பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டால், அந்த நபருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள், கவுன்சிலிங் கொடுத்து தற்கொலை எண்ணத்தை மாற்றிவிட முடியும் என்று அடித்துக்கூறுகின்றனர் இந்த ஆய்வு குழுவினர்.
96 சதவீத நம்பகத்தன்மை
ஆய்வுக்குழு பரிசோதித்த நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 96 சதவீதம் தங்களது கணிப்பு சரியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலையை தூண்டும் காரணங்களில் மரபணுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் குடும்பத்தில் ஏற்கனவே யாராவது தற்கொலைக்கு முயன்றுள்ளார்களா, அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளார்களா என்பதை தெரிந்துகொண்டு சிகிச்சை கொடுப்பது அவசியம் என்றும் இந்த ஆய்வு குழு தெரிவிக்கிறது.
அமெரிக்க புத்தகத்தில் வெளியீடு
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு குழு வெளியிட்டுள்ள இந்த தகவல் அமெரிக்க உளவியல் புத்தகத்திலும் வெளியாகியுள்ளது.