சூரியனே மறையாத பேரரசு பிரிட்டன் கற்ற பாடம்.. டிரம்ப் மறந்த வரலாறு.. அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பமா?
ஜெனிவா: "ஆயிரம் காலத்துப் பயிர்" என்பார்கள். ஆனால், ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் உண்மையான 'ஆண்ட பரம்பரை' என்று யாரையாவது சொல்ல வேண்டுமென்றால், அது பிரிட்டனைத்தான் குறிக்கும். உலகின் முக்கால்வாசி நிலப்பரப்பில் தனது கொடியைப் பறக்கவிட்டு, "சூரியனே மறையாத பேரரசு" என்று பெயர் எடுத்த பிரிட்டனே இன்று உலக அரசியலில் அடக்கத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வெறும் 250 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவோ, டொனால்ட் டிரம்ப் தலைமையில் ஆடும் ஆட்டம், உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
அனுபவம் தந்த அடக்கம் vs அதிகாரத் திமிர்
பிரிட்டன் ஒரு காலத்தில் உலக நாடுகளை ஆக்கிரமித்தது உண்மைதான். ஆனால், இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு, ஒரு நாட்டை மிரட்டலாலோ, ராணுவத்தாலோ நிரந்தரமாக அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறது பிரிட்டன். அதனால்தான், இன்று தங்களின் பொருளாதாரத்தையும், கலாச்சாரத்தையும் கொண்டு அமைதியாக காய்களை நகர்த்துகிறது பிரிட்டன்.

ஆனால், அமெரிக்காவோ இன்னும் அந்த 'கௌபாய்' காலத்து மனநிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக டிரம்ப், "நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உனக்கு வரி விதிப்பேன் , உன் பொருளாதாரத்தை முடக்குவேன்" என்று ஒவ்வொரு நாட்டையும் மிரட்டி வருகிறார்.
டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்த கையோடு, சில நாளிலேயே ஈரான் போராட்டத்தை ஊக்குவித்து வருகிறார். மறுபக்கம் கிரீன்லாந்தை கையகப்படுத்தவும் விரும்புகிறார். ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் உக்ரைன் பக்கம் நின்று ரஷ்யாவை மிரட்டி வருகிறார். மறுபுறம் சீனாவை வரியை காட்டி மிரட்டுகிறார். இந்தியாவையும் வரியை காட்டி மிரட்டி வருகிறார்.
பிரிட்டன் பேரரசு வீழ்வதற்கு ஒரு முக்கியக் காரணம், அவர்கள் காலனி நாடுகளின் மீது விதித்த அதீத வரிச்சுமைதான். அதே தப்பைத்தான் இன்று டிரம்ப் செய்கிறார். சீனா மீது 60% வரி, மெக்சிகோ மீது 25% வரி, இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி, என அவர் போடும் கணக்கு, இறுதியில் அமெரிக்க மக்களின் தலையிலேயே பெரிய சிக்கலாக முடியும் வாய்ப்பு உள்ளது.
வரியை ஏத்தினால் பொருட்கள் விலை ஏறும்; பொருட்கள் விலை ஏறினால் பணவீக்கம் வரும்; பணவீக்கம் வந்தால் நாடு திவாலாகும். இதுதான் உலகப் பொருளாதார விதி. இந்த உலகளாவிய மிரட்டல் அரசியலால் தான் டாலர் மீது நம்பிக்கை இழந்த நாடுகள் தங்கம் பக்கம் ஒதுங்குகின்றன. இதே நிலை நீடித்தால், சவரன் 2 லட்சம் ரூபாய் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள். இது டிரம்பிற்கு வரும் வெற்றியல்ல, அமெரிக்கப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண்பதன் அறிகுறி என்கிறார்கள்.
ஒரிஜினல் 'ஆண்ட பரம்பரை'யான பிரிட்டனே வரலாற்றைப் படித்துவிட்டு அமைதியாக இருக்கும்போது, வரலாற்றை மறந்துவிட்டு ஆடும் அமெரிக்காவின் ஆட்டத்தை உலக நாடுகள் சுத்தமாக ரசிக்கவில்லை. உலகம் இப்போது ஒரு நாட்டின் மிரட்டலுக்குப் பயப்படும் நிலையில் இல்லை. சீனா, ரஷ்யா, இந்தியா, ஐரோப்பா என நாடுகள் அணிதிரண்டால், அமெரிக்கா ஒரு தனித்தீவாக மாற அதிக காலம் எடுக்காது. "அடாவடி செய்தவர் நன்றாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை" என்பது டிரம்பிற்கு எப்போது புரியப்போகிறது? என்று உலக நாடுகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications