உக்ரைனுக்கு சர்ப்ரைஸ்.. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்ய அதிபர் புதின்
மாஸ்கோ: புனித வெள்ளி பண்டிகையை தொடர்ந்து நாளை ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு பண்டிகை நாளில் உக்ரைன் உடன் சண்டை போட மாட்டோம் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈஸ்டர் பண்டிகை அன்று மட்டும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்காது என்று தற்காலிக போர் நிறுத்தத்தை புதின் அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்புக்கு உக்ரைன் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
உக்ரைன் ரஷ்யா இடையே ஆண்டுக்கணக்கில் போர் நடந்து வரும் நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீரென தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி வலேரி ஜெராசிமோவிடம் போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி "இன்று மாலை 6 மணி (15:00 GMT) முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை, ரஷ்ய தரப்பு ஈஸ்டர் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறது," என்று ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யாவின் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று தான் நினைப்பதாகவும், போர் நிறுத்தத்தின் போது உக்ரைனின் நடவடிக்கைகள் தான் அந்நாடு அமைதி தீர்வை விரும்புகிறது என்பதை காட்டும் என்றும் புதின் கூறினார். அதேநேரம் ஆனால் உக்ரைன் போர் நிறுத்தத்தை மீறினால் அதைத் தடுக்க துருப்புக்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ரஷ்ய அதிபர் புதின், ராணுவ தளபதி ஜெராசிமோவிடம் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், "போர் நிறுத்தம் என்பது மனிதாபிமான நோக்கங்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேநேரம் அது உக்ரைன் ஆட்சியாளர்களால் பரஸ்பரம் கடைப்பிடிக்கப்பட்டால், ரஷ்யா கூட்டுப் படைகள் (படைகள்) கடைப்பிடிக்கும்." என்று கூறினார்.
முன்னதாக கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி அழைப்புக்கு பிறகு உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு இலக்குகள் மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார். எனினும் ரஷ்யா உக்ரைன் என இரு தரப்பினரும் அவ்வப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மிறி தாக்குதல்கள் நடத்தியாக பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். எனினும் உக்ரைன் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அமெரிக்க ஆதரவுடன் கூடிய 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை ரஷ்யாவின் அதிபர் புதின் இதுவரை ஏற்கவில்லை.
ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் மீதான போர் நிறுத்தத்தை உக்ரைன் 100 க்கும் மேற்பட்ட முறை மீறியதாக புதின் குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் தற்போது வரை நிலைமை ரஷ்யாவிற்கு சாதகமாக உள்ளது என்று எச்சரித்துள்ள புதின், ரஷ்யா எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறது என்றும், உக்ரைனில் நியாயமான தீர்வை உறுதி செய்வதற்கான அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளின் முயற்சிகளை வரவேற்பதாகவும் புதின் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications