சுவிட்சர்லாந்தில் இன்று முதல் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை.. தண்டனை என்ன?
ஜெனிவா: மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 1ம் தேதியான இன்று அமலுக்கு வந்துள்ளது. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிகம்பேர் ஆதரவு தெரிவித்ததால், இப்போது அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்து. அந்த பட்டியலில் உலகின் சிறந்த நாடு என்ற பெருமையுடன் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது. 2-வதுஇடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில் அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது.

சுவிட்சர்லாந்து என்பது உலகின் மிக அழகான நாடாக போற்றப்படுகிறது. இது ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை பூலோகத்தின் சொர்க்கம் என்று கூறுவார்கள். இங்கு தலைநகரம் என்று எதுவும் இல்லை.எனினும் நிர்வாக அலுவலகங்கள் எல்லாம் பெர்ன் நகரில் இருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார மையங்களாக ஜெனீவா மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் திகழ்கின்றன. சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், வாழ்வாதாரம், வாழ்க்கை சூழல், கல்வி என எல்லாவற்றிலும் முன்னேறிய நாடாக உள்ளது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பெரும்பாலானோர்(51 சதவீதம்) ஆதரித்தார்கள். இதையடுத்து, இது தொடர்பாக அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 6ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அந்த சட்டம் 2025 ஜனவரி 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதாவது உலகின் தலைசிறந்த நாடான சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிவதை தடை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தள்ளது. இந்த சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து சென்றால் அந்நாட்டு பணத்தில் 100 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்.
அதேநேரம் இந்த அபராத தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் 1000 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விமானங்கள், தூதரகங்கள், மதவழிபாட்டு தலங்கள், முகத்தை மறைக்காவிட்டால் உடல்நல ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில் இந்த சட்டம் பொருந்தாது என்று சுவிட்சர்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.











Click it and Unblock the Notifications