'ப்ளீஸ் என்னை விட்டுவிடு...’ கொலையாளியிடம் கெஞ்சிய இந்திய பெண் பொறியாளர் - போனில் துடித்த கணவர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர், தாக்குதலுக்கு முன்னர் கொலைகாரனிடம், ‘நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடு' என கெஞ்சியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பிரபா அருண் குமார், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 7ம் தேதி இரவு வழக்கம் போல பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபா, மர்மநபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிட்னி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த போது, பிரபா தனது கணவரிடம் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். எனவே, இது தொடர்பாக பிரபாவின் கணவர் அருணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ‘எனது மனைவி கொலைக்காரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார். நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார். பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. பின்னர் எதுவும் செல்போனில் கேட்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து, அதிக இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார் என காவல்துறை தரப்பு கூறுகிறது. தொடர்ந்து பிரபாவின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மேற்கு சிட்னியில் தொடர்ந்து நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்துடன் இதற்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கனவே இது போன்று அப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரபா அப்பகுதியில் நடந்துவரும் சி.சி.டி.வி. வீடியோவையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications