உக்ரைன் போரின் அடையாளமான பெண்! ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் தப்பித்தவர்.. உருக்கமாக அளித்த பேட்டி!
கீவ்: ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 52 வயது ஆசிரியை உயிர் பிழைத்த நிலையில், ‛‛தாய் நாட்டுக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். அதற்கான சக்தி என்னிடம் உள்ளது'' என உருக்கமாக கூறியுள்ளார். மேலும் ரத்தக்கறை படிந்த அவரின் முகம் உக்ரைனின் போர் அடையாள சின்னமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்று 4வது நாளாக ஏவுகணை, வெடிகுண்டு மூலம் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் உக்ரைன் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கும் வீரர்கள், பொருள் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
பல நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் போரை நிறுத்தாமல் முன்னெடுத்து வருகிறார். கீவ் நகரை கைப்பற்றுவதை இலக்காக வைத்து ரஷ்ய வீரர்கள் செயல்பட்டு வருகின்றன.

போரில் பொதுமக்கள்
உக்ரைன் வீரர்களும் விட்டு கொடுக்காமல் தங்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பொதுமக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய வீரர்களின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அத்துடன் உக்ரைனுக்கு பிற நாடுகள் ஆயுதம், பண உதவி செய்து வருகின்றன.

அப்பாவிகள் பலி
நேற்றைய நிலவரப்படி ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இறந்ததாகவும், 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்ததாகவும் உக்ரைன் அரசு கூறியிருந்தது. அத்துடன் உக்ரைனின் தாக்குதலில் 1000 ரஷ்ய வீரர்கள் மடிந்துள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தான் கார்கிவ் அருகே சுகுவ் பகுதியில் வசிக்கும் ஆசிரியை ஒலேனா குரிலோ (வயது 52), என்பவரின் வீட்டை ரஷ்யா ஏவுகணை தாக்கியது.

ஆசிரியை காயம்
இதில் அவரது வீடு சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒலேனா குரிலோ உயிர் பிழைத்தார். இருப்பினும் அவரது உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது.இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை குறித்து ஒலேனா குரிலோ கவலை தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்கிய தனது வீட்டின் முன்பு ரத்தக்கறை படிந்த முகத்துடன் அவர் கூறுகையில், ‛‛ ரஷ்யாவின் தாக்குதலில் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளேன்

உண்மையில் நினைக்கவில்லை
. பாதுகாக்கும் தேவதைகள் என்னுடன் இருந்திருக்க வேண்டும். உண்மையில் உக்ரைன் மீது ரஷ்யா,படையெடுப்பார்கள் என்பதையே நான் உள்பட அனைவரும் உண்மையில் நினைக்கவில்லை. ஆனால் எங்களது நம்பிக்கைக்கு எதிராக ரஷ்யா நடந்து வருகிறது.எனது தாய் நாட்டுக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். அதற்கான சக்தி என்னிடம் உள்ளது. நான் எப்போதும் எனது தாய் நாட்டின் பக்கம் தான் இருப்பேன் '' என உருக்கமாக அவர் கூறினார்.

உக்ரைனின் போர் அடையாளம்
இந்நிலையில் தான் பல பத்திரிகைகளில் ஒலேனாகுரிலோவின் படங்கள் வெளியாகி உள்ளது. தலையில் கட்டுபோடப்பட்ட நிலையில் ரத்தகறைகள் படிந்திருக்கும் அவரது முகம் உக்ரைனின் போர் அடையாளம் என ஐரோப்பிய நாடுகளின் பத்திரிகைகள் எழுதியுள்ளன. அதே வாசகங்களுடன் அவரது படங்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications