ஈரான், இஸ்ரேலை விடுங்க.. சீனா-தைவானுக்கு இடையே வெடிக்கப்போகும் போர்! வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா
பெய்ஜிங்: தைவான் தற்போது ராணுவ பயிற்சியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. திடீரென சீனா தாக்குதல் நடத்தியால் எப்படி சமாளிப்பது என்பதற்கான பயிற்சி ஆண்டு தோறும் 'ஹான் குவாங்' என்கிற பெயரில் நடக்கும். அது இந்த ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் கிழக்காசியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
இந்த பயிற்சியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து போர் பயிற்சி ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. பெரிய போர் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று துப்பாக்கிசூடு பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

"தைவானை சீனாவுடன் இணைப்பதை தவிர்க்க முடியாது" என்று சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில் தைவான் இன்று தனது பயிற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த பயிற்சி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ஜியாங் பிங், "ஹான் குவாங் பயிற்சி தைவான் மக்களை ஏமாற்றும் முயற்சி. இதனால் ஒரு தரப்பினருக்கு மட்டுமே நன்மை ஏற்படும்" என்று விமர்சித்திருக்கிறார்.
இந்த ஆண்டு பயிற்சியில், லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த HIMARS ஏவுகணை மற்றும் தைவானின் சொந்த தயாரிப்பான ஸ்கை ஸ்வாட் ஏவுகணை முதல்முறையாக பயன்படுத்தப்பட்டன. மேலும், டாங்கிகள் முதல் நீர்மூழ்கி கப்பல்கள் வரை புதிய ராணுவ உபகரணங்களையும் தைவான் வாங்கியுள்ளது. இது பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக தைவான் கடற்படை கப்பல்களை சீனா தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், இந்த சூழலை சமாளிக்க இந்த பயிற்சி உதவுகிறது என்றும் தைவான் கூறியிருக்கிறது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "சீனாவின் சிறிய தாக்குதல்களையும் முழுமையான போரையும் எதிர்கொள்வதற்காக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து பயிற்சி மேற்கொள்கின்றனர்" என்று தெரிவித்துள்ளது. பயிற்சியில் 22,000 ரிசர்வ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
உக்ரைன் போரில் இருந்து பல பாடங்களை தைவான் கற்றுக்கொண்டுள்ளது என்றும் தைவானில் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை தீவிரமாக யோசிக்கிறோம் எனவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனா தாக்கினால் முதலில் தகவல் தொடர்பு சாதனங்கள் மீது தாக்குதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்க ராணுவ கட்டளைகளை மாற்றி அமைக்கும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இது தகவல் தொடர்பு முடக்கத்தை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைவானை சீனா தனது பகுதியாகக் கருதுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தைவானை சுற்றி, சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஆனால் தைவான் அரசாங்கம் சீனாவின் உரிமையை ஏற்க மறுக்கிறது. தைவானின் எதிர்காலத்தை அங்கு வாழும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இதுதான் தற்போது பிரச்சனைக்கு காரணம்.
இந்த பிரச்சனையில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஒரு வகையில் பிரச்சனைக்கு காரணமே அமெரிக்காதான் என்று கூட சொல்லலாம்.












Click it and Unblock the Notifications